Published : 16 Sep 2019 01:16 PM
Last Updated : 16 Sep 2019 01:16 PM
சென்னை
பள்ளிகளின் காலாண்டு விடுமுறை ரத்து என வெளியான தகவல் உண்மையில்லை, காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகள் விருப்ப அடிப்படையிலானது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ''மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் நினைவு விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு அனைத்து வகைப் பள்ளிகளிலும் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் காந்திய சிந்தனைகளை மையமாக வைத்து 23.09.2019 முதல் 02.10.2019 வரை செயல் திட்டங்கள் வழங்கி பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும்'' என அறிவுறுத்தப்பட்டது.
இதனால் பள்ளிகளின் காலாண்டு விடுமுறை ரத்தா என்பதுகுறித்து சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, ''காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகள் விருப்ப அடிப்படையிலானது. விருப்பமுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் இதில் கலந்துகொள்ளலாம். இது கட்டாயமல்ல. இதனால் விடுமுறை நாட்கள் ரத்தாகாது. காலாண்டு விடுமுறைக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை'' என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக பள்ளிகளின் காலாண்டு விடுமுறை ரத்தா என்பது குறித்து விளக்கம் அளிப்பதுடன் முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT