Published : 16 Sep 2019 11:32 AM
Last Updated : 16 Sep 2019 11:32 AM

சூரியனால்கூட முடியாதது இந்தியால் எப்படி முடியும்?- வைரமுத்து கேள்வி

நாமக்கல்
சூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும் என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்க முடியும் என்ற ஒரு கருத்து அண்மையில் உரைக்கப்பட்டது. அதில் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்தி மொழி பேசாத எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது.

சூரியன்கூட இந்த ஒட்டுமொத்த பூமிக்கு ஒரே பகலைக் கொண்டு வந்து இணைக்கமுடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்துவிட முடியும்?

இரு மொழிக் கொள்கை என்பது தான் அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்து கொடுத்த ஜீவ கொள்கை. இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள். அரசு உறுதியாக இருக்க வேண்டும், என விரும்புகிறோம்'' என்றார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழா நாமக்கல்லில் நடைபெற்றது. விழாவில் பேசிய வைரமுத்து, ''சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஹீப்ரூ மொழி தொலைந்துவிட்டது. கிரேக்க மொழி அழிந்துவிட்டது. பழைய செம்மொழிகளின் பட்டியலில் தமிழும், சீனமும் மட்டும் தான் உள்ளது. தமிழ் மக்கள் 5 ஆயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சி. அதன் பிம்பங்களாக தமிழர்கள் உள்ளனர்.

தமிழ்ச் சொல்லை பாதுகாக்க வேண்டும். அதனுடன் உறவாட வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள். ஒவ்வொரு பெயரிலும் ஒரு வாழ்வு இருக்கிறது. ஒவ்வொரு பெயரிலும் ஒரு நாகரீகம் இருக்கிறது. ஒரு பெயர் சொல்லும்போது ஈராயிரம் ஆண்டு கலாச்சார வாசனையை எது நாசிக்கு கொண்டு வருகிறதோ அதுதான் நல்ல தமிழ் பெயர். அதுதான் நல்ல சொல்'' என்றார் வைரமுத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x