Published : 16 Sep 2019 11:04 AM
Last Updated : 16 Sep 2019 11:04 AM

ஒரு பொழுதாவது எனக்கு விடியும்; அன்று மக்களை தங்கத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டுவேன்: விஜயகாந்த்

திருப்பூர்

ஒரு நாள் ஒரு பொழுதாவது எனக்கு விடியும் என்றும் அன்று மக்களைத் தங்கத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-வது ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா திருப்பூரில் நேற்று மாலை நடைபெற்றது.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஓராண்டுக்கும் மேலாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் முப்பெரும் விழாவில் அவர் கலந்துகொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயகாந்தைப் பார்த்த தொண்டர்கள், உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

அப்போது பேசிய அவர், ''அன்புள்ள தொண்டர்களுக்கு, ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்துக்கு விடியும். அன்று மக்களைத் தங்கத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டுவேன். அடுத்த முறை ஒரு மணி நேரம் பேசுவேன்'' என்றார்.

அதைக் கேட்டு தொண்டர்களிடையே எழுந்த கரவொலி அடங்க, நீண்ட நேரமானது.

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய விஜயகாந்தின் மகன் பிரபாகரன், ''நான் எந்தப் பதவிக்காகவும் இங்கு வரவில்லை. விஜயகாந்தின் மகன் என்ற பொறுப்பே எனக்கு மிகப் பெரியது. அதுவே எனக்குப் பெரிய பதவி.

என்னையும் உதயநிதி ஸ்டாலினையும் ஒப்பிட வேண்டாம். ஏனெனில் அவர் என்னைவிடப் பெரியவர். அவருக்குத் திருமணமாகி, குழந்தை இருக்கிறது, ஆனால் எனக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லை.

என்னையும் அவரையும் தயவுசெய்து ஒப்பிட வேண்டாம். அது பழைய கட்சியாகவும் பழைய இளைஞரணியாகவும் இருந்துவிட்டுப் போகிறது. நாம் புதிதாக இருப்போம்'' என்றார் பிரபாகரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x