Published : 16 Sep 2019 07:37 AM
Last Updated : 16 Sep 2019 07:37 AM

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையால் முப்பருவக் கல்வி சிதையும் மாணவர்கள்: இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து

சி.பிரதாப்

சென்னை

மாணவர்கள் இடைநிற்றல் அதிக ரித்து, குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயமுள்ளதால் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும் என்று ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப் படும் என்று தமிழக அரசு அறிவித் துள்ளது. இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென ஆசிரியர்களும், கல்வியாளர்களும் வலியுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் கூறும்போது, ‘‘சிறு குழந்தைகளுக்கு தேர்வு என் றாலே பயம்தான். அதிலும் பொதுத் தேர்வு அவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுக்கும். சரா சரியாக 100 குழந்தைகளில் 10 முதல் 15 பேர் தங்கள் 10 வயதில்தான் புரிந்துக்கொள்ளும் திறன்களை பெறுகின்றனர். இத்தகைய குழந் தைகள் இசை, ஓவியம் உட்பட இதர கலைகளில் திறன் பெற்றிருப் பார்கள். ஆனால், பாடத்தேர்வு களில் பின்தங்கியே இருப்பர். மேலும், தொடர் பொதுத்தேர்வு நடைமுறைகள் புரிந்துக்கொள்ளும் அடிப்படை கற்றல் திறன்களை தவிர்த்து மனப்பாட கல்வியை ஊக்குவித்துவிடும். இதனால் மாண வர்களின் சிந்தனை திறன் கேள்வி குறியாகும்.

குழந்தை தொழிலாளர்களாக...

இதில் கிராமப்புறம், மலைவாழ் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலும், இடைநிற்றல் அதிகரித்து மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் சூழல் உருவாகும்’’என்றார்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் இரா. தாஸ் கூறும்போது, ‘‘அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லோரும் ஒரே சூழலில் இருந்து வருவ தில்லை. பொருளாதாரம் மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய பிள்ளை கள்தான் இங்கு அதிகம் படிக்கின் றனர். குடும்பச்சூழல் உட்பட பல இன்னல்களுக்கு இடையேதான் அந்த குழந்தைகள் படிக்க வேண்டி யுள்ளது. 8-ம் வகுப்பு வரையான கட்டாய தேர்ச்சி்யை தடை செய்தால் மாணவர்களுக்கு கூடுதல் மனஉளைச்சல் ஏற்படுவதுடன், இடைநிற்றல் அதிகரிக்கும்.

தேவையான வசதிகளை செய்து கொடுத்து அக்கறை செலுத்தித் தான் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும். சட்டத்தை கொண்டு வந்து அதிகாரம் செலுத்தினால் மட்டும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

மத்திய, மாநில அரசுகளின் சமீப நடவடிக்கைகள் இலவச கல்வியை முழுவதும் முடக்குவதற்கான செயல்களாகவே உள்ளன. இதனால் கல்வித்துறையில் தனி யார் நிறுவனங்கள் கை ஓங்கி, எளிய மக்களுக்கு கல்வி எட்டாக் கனியாகிவிடும்’’ என்றார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, ‘‘முன்னாள் முதல் வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி செய்யப்படுவதாக அறி வித்தார். ஆனால், அவர் வழி வந்த அதிமுக ஆட்சியில் அதற்கு முற் றுப்புள்ளி வைப்பது ஏற்புடைய தல்ல. மாணவர்கள் சரியாக படிக்கவில்லை எனில் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.

மாணவர்கள் படிப்பதற்கான தகுந்த சூழலை உருவாக்குவதே அரசின் கடமை. அதை விடுத்து சட்டத்திருத்தம் கொண்டு வருவது மாணவர்கள் நலனை பாதிக்கும். இது மாணவர்கள் இடைநிற்றல் உயர்தலுக்கு வழிவகுப்பதுடன், பெண் குழந்தைகள் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்’’ என் றார்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராபர்ட் கூறும்போது, ‘தமிழக கல்வித் துறை முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரி கிறது. ஏனெனில், சமீபகாலமாக மத்திய அரசு கொண்டுவரும் கல் வித் திட்டங்கள் எல்லாம் முதலில் தமிழகத்தில் அமல்படுத்தி சோதனை செய்யப்படுகிறது.

தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. மாணவர்கள்ளின் புத்த கச் சுமை, மனஅழுத்தத்தைக் குறைக்க முப்பருவ கல்விமுறை கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனி புத்த கங்கள் வழங்கி பிரத்யேக மாக தேர்வுகள் நடத்தப்படு கின்றன.

இந்நிலையில் 5, 8-ம் வகுப் புக்கு பொதுத்தேர்வு எனில் ஓராண்டு முழுவதுள்ள மொத்த பாடங்களையும் படிக்க வேண்டும். இதனால் மாணவர்களுக்கு புத்தகச் சுமையும், மனஅழுத்தமும் அதிக ரிக்கும். அனைத்து பள்ளிகளிலும் பாடவாரியாக ஆசிரியர்களை நியமித்து கற்பித்தல் பணியை மேம்படுத்திய பின் பொதுத்தேர்வு கொண்டு வந்தால் பிரச்சினை எழாது. ஆனால், 70 சதவீத அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஈராசிரியர் களே உள்ளன. எனவே, பொதுத் தேர்வு முறையை கல்வித் துறை திரும்ப பெற வேண்டும் ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x