Published : 14 Sep 2019 11:31 AM
Last Updated : 14 Sep 2019 11:31 AM

மத்திய அரசின் ஆணையை ஏற்று 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு மற்றும் மொழிப்பாடத் தேர்வில் மாற்றம் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோட்டில் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அவர் அளித்த பேட்டியில், ''மத்திய அரசு இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வித்துறைக்காக ஒரு சட்டத்தை இயற்றி இருக்கிறது. அதன் வாயிலாக, 5 மற்றும் 8-ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற ஆணையை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது.

அந்த ஆணையை ஏற்று, தமிழக அரசு அதை எப்படி நிறைவேற்றலாம் என்று முடிவு செய்தது. அதையே தற்போது அரசாணையாக வெளியிட்டிருக்கிறது. பொதுத் தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் இரண்டு தாள்களாக இருந்தன. மொழிப் பாடத்திட்டங்களில் அதை ஒன்றாக மாற்றி அமைத்திருக்கிறோம். அதாவது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தாள் இருந்தால் போதும் என்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி செய்வதில் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகள் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித் தார்.

இதனால் இந்த விவகாரத்தில் நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x