Published : 12 Sep 2019 05:24 PM
Last Updated : 12 Sep 2019 05:24 PM

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த சோனியா காந்தி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலைவாணி உட்பட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவத் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது எனவும், அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்வு நடைமுறையை முறையாகப் பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை எனவும் தேர்வில் நிறைய விதிமீறல்கள் உள்ளதாகவும் தேர்வுப் பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. எனவே இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தங்கள் மனுவில் கோரினர்.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து மருத்துவத் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x