Published : 12 Sep 2019 03:56 PM
Last Updated : 12 Sep 2019 03:56 PM

புதுச்சேரியில் இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கப்படாததைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இலவச அரிசி திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கப்படாததைக் கண்டித்து பாஜகவினர் குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 39 மாதங்களில் 17 மாதங்களுக்கு இலவச அரிசியும் 5 மாதங்களுக்கு அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்கப்பட்டது. இதில் 17 மாத காலத்துக்கு இலவச அரிசி வழங்கப்படவில்லை. இலவச அரிசி வழங்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு துணைநிலை ஆளுநருக்கு நகல் அனுப்பிய போது அரிசிக்குப் பதிலாக பணமாகத்தான் வழங்க வேண்டும் என தெரிவித்ததால் ஆட்சியாளருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் உருவானது.

இலவச அரிசி வழங்குவது தொடர்பாக துணைநிலை ஆளுநர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மத்திய அரசிடமிருந்து பதில் வரும் வரை இலவச அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணமாகப் போடப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வங்கிக் கணக்கில் 17 மாத காலமாக அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கப்படாதை உடனே வழங்க வலியுறுத்தி இன்று (செப்.12) பாஜகவினர் 100-க்கும் மேற்பட்டோர் தட்டாஞ்சாவடி குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகையின் போது காவல்துறையினர் ஏற்படுத்திய தடுப்புகளை மீறி குடிமைப் பொருள் அலுவலகத்தில் நுழைய முயன்றதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் குடிமைப் பொருள் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியதையடுத்து முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x