

சென்னை
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று (செப்.12) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 14 செ.மீ. மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 13 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் 8 செ.மீ. மழையும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையோ அல்லது இரவிலோ நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை".
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.