Published : 12 Sep 2019 10:26 AM
Last Updated : 12 Sep 2019 10:26 AM
மதுரை
வைகை அணை நீர்மட்டம் நேற்று 54.45 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் 55 அடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தென்மேற்குப் பருவமழை ஆரம்பத்தில் சரியாகப் பெய் யாமல் கடைசி கட்டத்தில் ஓரளவு பெய்தது. அதனால், பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து வைகை அணைக்கும் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால், வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் இரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மதுரையின் குடிநீர் பிரச்சினையும் ஓரளவு சரியானது. இந்நிலையில், பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின்றி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி 1,114 கன அடி தண்ணீர் வருகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.85 அடி இருந்தது. வைகை அணைக்கு 1,660 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 54.43 அடியைத் தொட்டது. இன்னும் ஓரிரு நாளில் வைகை அணை 55 அடியைத் தாண்டிவிடும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த மழை பெரியாறு, வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் பெரிய அளவில் பெய்யாது. ஆனால், தென்மாவட்டங்களில் பெய்யும் பட்சத்தில் நீர்நிலைகளில் நீர் சேகரமாகும். குடிநீருக்கு சிக்கல் எழாது. ஆனால், வடகிழக்குப் பருவமழை ஏமாற்றும் பட்சத்தில், இருபோகப் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதால் வைகை அணை நீர்மட்டம் குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT