Published : 12 Sep 2019 08:01 AM
Last Updated : 12 Sep 2019 08:01 AM

கல்லிடைக்குறிச்சி கோயிலில் 37 ஆண்டுக்கு முன்பு திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு: சென்னைக்கு நாளை கொண்டு வரப்படுகிறது

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப் பட்ட நடராஜர் சிலை.

த.அசோக்குமார்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் கல்லி டைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலில் திருடுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை, பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது. டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இச்சிலை நாளை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லி டைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் சேர மன்னர்களால் கட்டப் பட்டது. இக்கோயிலில் கடந்த 1982- ஜூலை 5-ம் தேதி இரவு, கதவுகள் உடைக்கப்பட்டு, மூலஸ்தானத்தில் இருந்த நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திரு வில்லி விநாயகர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். திருடுபோன சிலை களை நீண்ட காலமாகியும் போலீ ஸாரால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய் வுக் குழு இந்த வழக்கை கையில் எடுத்தது. இக்குழுவின் விசாரணை யில், கல்லிடைக்குறிச்சி கோயிலில் திருடுபோன நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய நாட்டில் அடிலெய்ட் நகரில் உள்ள ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களின் உதவியுடனும், தொல்லியல் துறை ஒத்துழைப்பு டனும் ஆய்வு செய்ததில் அந்த நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

செலவை ஏற்காத அரசு

சிலையை இந்தியாவுக்கு கொண்டுவர விமான பயணச் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வலியுறுத்தப்பட்டது. அரசு இதை ஏற்றுக்கொள்ளாத நிலை யில், ஆஸ்திரேலிய கேலரியின் பதி வாளர் ஜேன் ராபின்சன் விமானச் செலவை தானே ஏற்று, டெல்லிக்கு சிலையை கொண்டுவந்து ஒப் படைத்தார். அவரிடம் இருந்து சிலையை சிறப்பு புலனாய்வுக் குழு பெற்றுக்கொண்டது.

சுமார் 600 முதல் 700 ஆண்டு களுக்கு முற்பட்ட இந்த சிலையின் தற்போதைய வெளிநாட்டு மதிப்பு ரூ.30 கோடி. மீட்கப்பட்ட சிலை டெல்லியில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வரப்படுகிறது. நாளை (13-ம் தேதி) சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இந்த சிலை வந்து சேரும்.

கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் சிலை ஒப்படைக்கப்படும். பின்னர், நீதி மன்றத்தின் உத்தரவைப் பெற்று கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடை யார் கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் என்று சிறப்பு புல னாய்வுக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x