Published : 11 Sep 2019 03:36 PM
Last Updated : 11 Sep 2019 03:36 PM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,000 கனஅடியாக அதிகரிப்பு: நீடிக்கும் வெள்ள அபாயம்

சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கர்நாடகாவில் கனமழை காரணமாக கபிணி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின. கே.ஆர்.எஸ். அணைக்கு விநாடிக்கு 41,000 கனஅடி வீதமும், கபிணி அணைக்கு நொடிக்கு 17,000 கனஅடி வீதமும் நீர் வந்துகொண்டிருக்கிறது.

இன்று (செப்.11) காலை 8 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 38,000 கனஅடி வீதமும், கபிணி அணையில் இருந்து விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக விநாடிக்கு 50,000 கனஅடி வீதம் தண்ணீர் காவிரியில் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே திறக்கப்பட்டதையும் சேர்த்து தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 70,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

ஒகேனக்கலிலும் இதே அளவு தண்ணீர் பாய்வதால், அங்கு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று இரவு விநாடிக்கு 65,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று (செப்.11) 68,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 65,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாயில் இருந்து விநாடிக்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.74 அடியாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 94.65 டிஎம்சியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x