Published : 11 Sep 2019 02:36 PM
Last Updated : 11 Sep 2019 02:36 PM

புதுச்சேரி அரசு அதிகாரிகள் மக்களோடு நட்பாகப் பழகுவதில்லை: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

பேரிடர் காலத்தில் பேரழிவைத் தாங்கி நிற்கும் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான கருத்தரங்கம்

புதுச்சேரி

அரசு அதிகாரிகள் மக்களோடு நட்பாகப் பழகுவதில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

பேரிடர் காலத்தில் பேரழிவைத் தாங்கி நிற்கும் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான கருத்தரங்கம் புதுச்சேரி அரசு சார்பில் தனியார் ஹோட்டலில் இன்று (செப்.11) நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், மத்திய வீட்டு வசதி அமைச்சகத்தின் செயலர் துர்கா சங்கர் மிஷ்ரா, தலைமைச் செயலர் அஸ்வினிகுமார், செயலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் கலந்துகொண்டு முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் சக்தி புதுச்சேரி அரசுக்கு உள்ளது. அதே நேரம் வளரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். அப்போதுதான் நாடு ஒட்டு மொத்த வளர்ச்சியை எட்டும். வீடு கட்ட அனுமதி கேட்டு வரும் பொதுமக்களை அலைக்கழிக்கக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

ஆனால், வீடு கட்டும் திட்டத்தில் அரசு அதிகாரிகள் மக்களுக்கு விரோதமாகச் செயபடுகின்றனர். நட்போடு செயல்படுவதில்லை என்பதால் புதுச்சேரியில் வளர்ச்சி தடைபடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அதிகாரிகள் மதிக்காமல் செயல்படுகின்றனர். ஒரு மாநிலம் வளர்ச்சி பெறாமல் எப்படி நாடு முன்னேறும்," என ஆவேசத்துடன் தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x