Published : 11 Sep 2019 01:36 PM
Last Updated : 11 Sep 2019 01:36 PM

விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடன் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் பொய்: ஹெச்.ராஜா

நாகை

வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடன் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது என, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. இதில் முறையாகத் திரும்பச் செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டித் தொகை மானியமாக வழங்கப்படும்.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி முதல் கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தத் தகவல் பொய்யானது என, ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று (செப்.11) செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ''இம்மாதிரியான பொய்த் தகவல்களைப் பரப்புபவர்களை சமூக விரோதி எனக்கருதி, ஒதுக்கிவிட வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நாளை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க உள்ளார். விவசாயிகளுக்கு நன்மைகள் மட்டுமே செய்யும் அரசாக மத்திய அரசு விளங்குகின்றது. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி இல்லை.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் நிறுத்தப் போவதாக பொய்யான தகவலைப் பரப்புகின்றனர். இப்படி பரப்புவது முட்டாள்தனமான பொய். இம்மாதிரி சமூக வலைதளங்களில் பரப்புபவர்களை சமூக விரோதிகளாகக் கருதி மக்களும் விவசாயிகளும் அவர்களை ஒதுக்கிட வேண்டும்," எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x