Published : 11 Sep 2019 11:46 AM
Last Updated : 11 Sep 2019 11:46 AM
சென்னை
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அதிமுக பிரமுகரின் மகன் திருமணம் இன்று நடைபெற்றது.
அதிமுக வடசென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பவானி சங்கர். இவரின் மகன் சாம்பசிவம் என்கிற சதீஷுக்கும் தீபிகாவுக்கும் ஜெயலலிதா நினைவிடத்தில் திருமணம் இன்று நடைபெற்றது.
ஐயர் மந்திரங்கள் ஓத, சடங்கு சம்பிராதயங்களுடன் திருமணம் நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்துகொண்டனர். வந்தவர்கள் அமரும் வகையில், பந்தல் அமைக்கப்பட்டு, நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.
திருமணத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான கோகுல இந்திரா கலந்துகொண்டார். இதுகுறித்து கோகுல இந்திரா பேசும்போது, ''ஜெயலலிதா இருக்கும் இடமே திருக்கோயில். இங்கு திருமணம் நடந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். தீவிர அதிமுக விசுவாசியான பவானி சங்கர்- வாசுகியின் மகன் திருமணம் இங்கு நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்'' என்று தெரிவித்தார்.
மணமகனின் தந்தை பவானி சங்கர் பேசும்போது, ''என்னுடைய திருமணத்துக்கு ஜெயலலிதா வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் வர முடியாததால் முக்கிய நிர்வாகியை அனுப்பி வைத்தார். இப்போது எனது மகனின் திருமணத்தை ஜெ. நினைவிடத்தில் நடத்த ஆசைப்பட்டேன். நேற்று வரை அனுமதி கிடைக்கவில்லை. இன்று அனுமதி கிடைத்து திருமணமும் நடந்துள்ளது. ஜெயலலிதாவே நேரில் வந்து ஆசி வழங்கியதைப் போல உணர்கிறேன்'' என்றார்.
திருமண விழாவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் செயலாளர் தமிழ்மகன் உசேன், ஆறுமுகம் (எ) சின்னையா மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT