Published : 11 Sep 2019 11:14 AM
Last Updated : 11 Sep 2019 11:14 AM
மதுரை
மக்களின் தேவைகள் அதிகரித்தால் பொருளாதாரப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதல்வரின் வெளிநாட்டுப் பயணத் திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால் பொறாமையின் காரணமாக, திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
வெளிநாட்டுப் பயணத்தின்போது அங்குள்ள பால் பண்ணைகளைப் பார்வையிட்டோம். அங்கு பின்பற்றப்படும் நவீனத் தொழில்நுட்பங்களை நமது மாநிலத்தில் பின்பற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்.
இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் சுமார் ரூ.8,500 கோடிக்குத் தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏராளமான, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன்மூலம் மாஸான லீடராக முதல்வர் பழனிசாமி திகழ்கிறார்.
எந்த ஆட்சி வந்தாலும், மக்களின் தேவைகள் அதிகமாகி விட்டன. முன்பெல்லாம் ரயிலில் சென்றால்கூட அதிகக் கூட்டமிருக்காது. ஆனால் இன்றைய தேதிக்கு விமானத்திலேயே டிக்கெட் கிடைப்பதில்லை. பேருந்து, ரயில் என எதிலுமே சுலபமாக டிக்கெட் கிடைக்காது.
அந்த அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது. மக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல அவர்களின் போக்குவரத்தும் அதிகமாகியுள்ளது. மக்களின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், பொருளாதாரப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.
அதைச் சரிசெய்யும் அரசாகத்தான் மத்தியில் பிரதமர் மோடியின் அரசு உள்ளது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி அரசும் இருக்கிறது'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவைகள் அதிகரித்தால் பொருளாதாரப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT