Published : 10 Sep 2019 05:29 PM
Last Updated : 10 Sep 2019 05:29 PM

தமிழகம் முழுவதும் நடவு செய்ய 2 கோடி பனை விதைகள் இலவசமாக விநியோகம்: நிலத்தடி நீரை சேமிக்க அரசு தோட்டக்கலைத்துறை புது முயற்சி

மதுரை

தமிழகத்தில் நிலத்தடி நீரை சேமிக்கவும் நீர்நிலைகளில் மண் அரிப்பை தடுக்கவும் அரசு தோட்டக்கலைத்துறை 2 கோடி பனை மரம் விதைகளை இலவசமாக விநியோகம் செய்து நடவு செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட வறட்சியான மாவட்டங்களில் பனைமரம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த மரங்கள், மற்ற மரங்களைக் காட்டிலும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து நன்குவளரக் கூடிய தன்மை உடையது.

சாதாரணமாகஒரு பனைமரம் 15 முதல் 20ஆண்டுகளில் பலன்தர ஆரம்பிக்கும். இவை 150 முதல்200 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரக்கூடியது. இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொன்றும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. பனைமரத்தில் அனைத்து பாகங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பனைமரங்கள் நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பையும் தடுக்க கூடியது. அதனால், இப்பனை மரங்களை ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றின் கரைகளில் முன்னோர்கள் நடவு செய்து வளர்த்துள்ளனர். தற்போது இந்த மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டதால் தென் மாவட்டங்களில் வறட்சி நிரந்தரமாகிவிட்டது. அதனால், இந்த மரங்களை மீண்டும் நடவு செய்ய தமிழக அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது மாவட்டம்தோறும் குளங்கள், கண்மாய்கள் யாவும் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு குடிமராமத்துதிட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தூர்வாரப்பட்ட இந்த குளங்கள், கண்மாய்களின் கரைகளில் இந்த பனை விதைகளை இலவசமாக பெற்று நடவு செய்து கரைகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுத்திட அந்தந்த ஊரின் தன்னார்வு தொண்டுநிறுவனங்கள் முன்வந்து செயல்பட தொடங்கியுள்ளன.

மதுரையில் வரும் 22-ம் தேதி ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்க பனை காக்கும் களப்பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது அரசும் பனை மரங்களை காக்கவும் புதிதாக உருவாக்கவும் களம் இறங்கியுள்ளது.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை தலைமையில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், பொதுப் பணித்துறை அலுவலர்களும் ஒருங்கினைந்து செயல்பட்டு குளங்கள், கண்மாய்களில் பனை மரங்களை நட்டு கரைகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளன. இதற்கு மதுரை தோட்டக்லைத்துறை இலவசபனங்கொட்டைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், "ஒவ்வொரு மாவட்டத்திலும் தோட்டக்கலைத்துறை பனங்கொட்டைகளை வழங்குகிறது.

தமிழகம் முழுவதும் 2 கோடி பனைமரம் விதைகளை இலவசமாக வழங்க தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக 64 தோட்டக்கலைப்பன்னைகளிலும் இந்த பனை மரம் விதைகளை உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் போன்றவற்றிற்கு இலவசமாக 4லட்சம் பன மரம் விதைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த விதைகள் யாவும் தற்போது மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டாரத்தில் உள்ள பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலை பண்னையில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பனை விதைகள் தேவைப்படுவோர் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x