Published : 09 Sep 2019 03:27 PM
Last Updated : 09 Sep 2019 03:27 PM

மோடியின் 100 நாள் ஆட்சி; நாட்டு மக்கள் வேதனைகளை அனுபவிக்கின்றனர்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை

பொருளாதாரத் தோல்வியை மூடி மறைப்பதற்கு எத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் பாஜகவினர் வெற்றி பெற முடியாது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (செப்.9) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் 2019-ல் அமைந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் அடைந்திருக்கிறார். நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் மிகுந்த துணிச்சலோடு கூறியிருக்கிறார். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் தமது ஆட்சியின் சாதனைகளைக் கூறுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவர் கூறுவதில் எள்ளின் முனை அளவாவது உண்மை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது ஒரு எதிர்க்கட்சியின் கடமையாகும். அப்படி ஆய்வு செய்கிற போது மிகுந்த அதிர்ச்சியும், ஏமாற்றமுமே ஏற்படுகிறது.

உலக நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டதை நரேந்திர மோடியால் மறுக்க முடியுமா? இதற்குக் காரணம் வரலாறு காணாத பொருளாதார மந்தநிலை என்பதை எவராலும் மறுக்க முடியாது.

2014-ல் ஆட்சி அமைந்ததும் இரண்டு இலக்கு வளர்ச்சியை எட்டுவோம், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதியை நரேந்திர மோடி வழங்கினார். ஆனால் ஆட்சி அமைந்தவுடன் முதலில் ஜிடிபி கணக்கிடும் முறையையே மாற்றியமைத்து பழைய முறையை விட, ஜிடிபியை 2 சதவீதத்திற்கு மேல் உயர்த்திக் காட்டினார்.

அதைத் தொடர்ந்து நவம்பர் 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தினார். இத்தோடு நில்லாமல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி பொருளாதாரச் சரிவை அதிகப்படுத்தினார். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகச் சரிந்துள்ளது. விவசாயத் துறையின் வளர்ச்சி வெறும் 2 சதவீதம். உற்பத்தித் துறையின் வளர்ச்சி 1 சதவீதத்திற்கும் கீழாக 0.6 சதவீதம்.

பிரதமர் அறிவித்த பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக நாட்டு மக்களிடையே பல முனைகளில் பாதிப்பு ஏற்பட்டது. ரொக்கப் பரிவர்த்தனை குறைந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இதனால் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை. மொத்தப் பணமும் வங்கிக்கு வந்துவிட்டதை அறிவிக்க ரிசர்வ் வங்கி இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்தோடு அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி அவசரக் கோலத்தில் அமல்படுத்தப்பட்டதால் சிறு, குறு தொழில் செய்வோர், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

நரேந்திர மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது வேலைவாய்ப்புகள் தான். பொருளாதார அறிஞர் ஒருவரின் கணிப்பின்படி 1 சதவீத ஜிடிபி வளர்ச்சியினால் 15 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மூன்று கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும். இதன்படி ஜிடிபி வளர்ச்சியில் கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்ட 3.2 சதவீதச் சரிவு ஏறத்தாழ 10 கோடி மக்களின் வாழ்வைப் படுகுழியில் தள்ளிவிட்டது. சுதந்திர இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை வளர்ந்துள்ளது. இதை தேசியப் புள்ளி விவர ஆணையம் உறுதி செய்துள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை வேகமாக திரும்ப எடுத்துக்கொண்டு வருகின்றனர். இதனால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு ஒரே ஆண்டில் 99 பைசா சரிந்துள்ளது. மத்திய அரசு தனது ஒட்டுமொத்த செலவு மொத்த ஜிடிபியில் 14 சதவீதமாக இருந்ததை 12 சதவீதமாகக் குறைத்துள்ளது.

நிதி பற்றாக்குறையைச் சரிகட்ட இதுவரை முன்மாதிரி இல்லாத வகையில் மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியைஒ பெற்றுள்ளது. பொதுத்துறை வங்கிகள் 27 ஆக இருந்ததை 12 ஆக குறைத்தது வாடிக்கையாளர்கள், பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதற்குக் காரணம் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூபாய் 8 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக உயர்ந்தது தான்.

இதற்குக் காரணம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடன் திரும்பச் செலுத்தப்படாதது தான். வங்கிக் கடன் மோசடியில் ஏற்பட்டிருக்கும் இழப்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் ரூபாய் 41 ஆயிரத்து 167 கோடியாக இருந்தது. 2017-18 இல் ரூபாய் 71 ஆயிரத்து 452 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 73.8 சதவீதம் அதிகமாகும். இத்தகைய வங்கி மோசடிக்கு யார் காரணம்? யார் பொறுப்பு?

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்த நரேந்திர மோடி ஆட்சியில் விவசாய வளர்ச்சி வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கும் என்பது வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்த எந்தக் கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. அதற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஆனால், நரேந்திர மோடி தமக்கு இருக்கிற சொற்பொழிவு ஆற்றலினால் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மூடி மறைப்பதைப் போல வேதனைகளின் பட்டியலுக்குப் பதிலாக சாதனைகளின் பட்டியலை அறிவித்து வருகிறார். மோடி அறிவித்திருப்பதோ சாதனைகளின் பட்டியல். ஆனால், நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகளின் பட்டியல். அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற இந்தியப் பொருளாதாரத்தைச் சரிகட்டுவதில் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள்.

அந்தத் தோல்வியை மூடி மறைப்பதற்கு எத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் பாஜகவினர் வெற்றி பெற முடியாது", என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x