

சென்னை,
'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்கிற திட்டத்தை தமிழகத்தில் அமலாக்கம் செய்வதை கடுமையாக எதிர்ப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ''2013-ம் ஆண்டு முதல் தமிழக அரசினால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம், எவ்வித மாற்றமுமின்றி 2016-ம் ஆண்டு தற்போதைய அரசால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து, குறிப்பாக அஸ்ஸாம், பிஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலை வாய்ப்பு மற்றும் இதர காரணங்களுக்காக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடிபெயர்ந்து தமிழக நகரங்களில் வசிக்கின்றனர்.
தமிழகத்தின் மக்கள் தொகையில் 4 கோடி மக்கள், நகரங்களில் தான் வசிக்கிறார்கள். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நகரவாசிகளுக்கு 50% உச்சவரம்பு என்கின்ற ஆபத்து இருப்பதால், தமிழகத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் விவரங்கள் போன்றவை சரியாக இணைக்கப்படாமல், 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்கின்ற திட்டம் கவனக்குறைவாக அமல்படுத்தப்பட்டால் அது தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் பொது விநியோக முறையை கடுமையாக பாதிக்கும்.
ஏற்கெனவே 2017-ல் அரசு வகுத்த விதிகளின் படி,
* மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை மேற்கூரை மற்றும் சுவர்களைக் கொண்ட வீடுகள்.
* பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்.
* அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு அதிகமாக உள்ள குடும்பங்கள்
குடும்ப அட்டை பெறுவதில் இருந்து நீக்கம் செய்வது போன்ற பொது விநியோக முறையில் மக்களுக்கு இருக்கின்ற தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்து, தமிழக குடும்ப அட்டைதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பிற மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த ஏழை குடும்பங்களுக்கு அளிப்பதற்கான தானியங்கள், மற்றும் அதனைச் சேமித்து வைத்து விநியோகிப்பதற்கும் இத்திட்டத்தினால் ஏற்படும் கூடுதல் செலவினை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறதா என்றும் தெளிவான கொள்கை முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
இத்திட்டத்தினை கடுமையாக எதிர்த்து இருக்க வேண்டிய தமிழக முதல்வரும், உணவுத்துறை அமைச்சரும் இத்திட்டத்தை ஆதரிப்பதையும் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கின்றது.
பல்வேறு உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில், 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்கின்ற இந்தத் திட்டம், இந்திய அரசியல் சாசனத்தில் கூறியுள்ள கூட்டாட்சி அமைப்பிற்கு, ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு திட்டம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி உறுதியாக நம்புகிறது.
எனவே மக்கள் நீதி மய்யம் கட்சி இத்திட்டத்தினை தமிழகத்தில் அமலாக்கம் செய்வதை கடுமையாக எதிர்க்கின்றது'' என்று தெரிவித்துள்ளது.