Published : 07 Sep 2019 10:28 AM
Last Updated : 07 Sep 2019 10:28 AM

சாத்தனூர் அரசு பள்ளிக்கு `வானமே கூரை’- ஆய்வகம், குடிநீர், கழிவறை வசதிகூட இல்லை

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி அருகேயுள்ள சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்த நிலையில் இருப்பதால் திறந்தவெளியில் வகுப்பறைகள் நடக்கின்றன. மேலும், ஆய்வகம், குடிநீர், கழிவறை வசதியில்லாததால் மாணவர்கள் தவிக்கின்றனர்.

சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாதகநேரி, வருந்தி, பஞ்சனூர், சீவலாதி, புதுக்கோட்டை, நன்னியாவூர், குறிச்சி, கோடனூர், கட்டடம், மேலேந்ததல், செலுங்கனேந்தல், அனந்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 237 மாணவர்கள் படிக்கின்றனர். 18 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இப்பள்ளி தொடர்ந்து பத்தாம் வகுப்பில் 16 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. 2014-ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், ஏற்கெனவே இருந்த 3 கட்டிடங்கள் மட்டுமே இருப்பதோடு, அவையும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

பெற்றோர்-ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் சார்பில் தகரக் கொட்டகையுடன் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இருந்தபோதிலும் இடப் பற்றாக்குறை காரணமாக சில வகுப்பறைகள் திறந்தவெளியில் மரத்தடியில் நடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

குடிநீர் வசதி இல்லாததால் உவர்ப்பு நீரையே மாணவர்கள் அருந்துகின்றனர். கழிவறை வசதி இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் திறந்தவெளியைப் பயன்படுத்துகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 தொடங்கி 5 ஆண்டுகளாகியும் ஆய்வக வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லாததால் வகுப்பு நடக்கும்போதே கால்நடைகள் நடமாட்டம் உள்ளது. போதிய வசதிகள் இல்லாததால் மாணவர்களின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.

இது குறித்து சாத்தனூர் கிராம மக்கள் கூறியதாவது: இந்தப் பள்ளி 1973-ல் தொடங்கப்பட்டது. 2009-ல் ரூ.2 லட்சம் செலுத்தி பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்புதான் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிக்கு 6.9 ஏக்கர் கிராம இடத்தைத் தானமாகக் கொடுத்துள்ளோம். ஆனால், கட்டிட வசதிகளைச் செய்து கொடுக்க கல்வித்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.

ஆசிரியர்கள் சிறப்பாகப் பாடம் நடத்துவதால் இப்பள்ளியில் சேர பக்கத்து கிராம மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் போதிய வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளிகளை நாடும்நிலை உள்ளது. எங்கள் கிராமம் மாவட்டத்தின் எல்லையில் இருப்பதால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. பள்ளிக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x