Published : 06 Sep 2019 09:10 PM
Last Updated : 06 Sep 2019 09:10 PM

மீண்டும் மீண்டும் சர்ச்சையில் பிக் பாஸ்; பொதுமக்களை விமர்சனம் செய்த சாக்‌ஷி: நெட்டிசன்கள் கடும் கண்டனம்

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி மீண்டும் வீட்டுக்குள் விருந்தினராக வந்த நிலையில் வனிதாவுடன் மோதிய ஷெரினுக்கு ஆறுதல் சொல்வதற்காக தெருவில் போகும் நாய்கள் என பொதுமக்களைத் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாக்‌ஷியை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் தீட்டித் தீர்க்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3 தற்போது நடக்கும் நிலையில் இதற்கு முன் 2 சீசன்களில் இல்லாத வகையில் பிக் பாஸ் 3 தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறது. பிக் பாஸ் விவகாரத்தில் நிகழ்ச்சியை நடத்தும் கமல் இரண்டு விஷயங்களை திரும்பத் திரும்பச் சொல்வார். ஒன்று மற்ற மாநிலங்களில் நடக்கும் பிக் பாஸ் போல் இங்கு நடத்த முடியாது. பெண்களுக்கு இழுக்கு வராமல், ஒழுங்கீனமாக நடக்கும் காட்சிகளை அனுமதிக்க முடியாது என்பார். மற்றொன்று மக்கள்தான் நீதிபதிகள். அவர்கள்தான் உங்களை தீர்மானிப்பார்கள் நான் மக்களின் பிரதிநிதியாகத்தான் உங்களிடம் பேசுகிறேன் என்பார்.

இந்த சீசனில் முதல் சர்ச்சையாக பேருந்தில் பெண்களை உரசினேன் என தெரிவித்த சரவணனின் பேச்சால் சர்ச்சை எழுந்தது. மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதால் சரவணன் வெளியேற்றப்பட்டார், போட்டியாளர்கள் மீரா மிதுன், வனிதா விஜயகுமார் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டு அவர்களை பிக் பாஸ் வீட்டில் சென்று போலீஸ் விசாரணை நடத்தியது.

மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக வெளியேற்றப்பட்டார். அவர் மிரட்டுகிறார் என பிக் பாஸ் நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தது. என் பிரச்சினையைத் தீர்க்கவில்லை, பிக் பாஸ் இல்லத்தில் எனக்குப் போட்டியாளர்கள் தொந்தரவு கொடுத்தார்கள், 100 நாட்கள் முடிவதற்கு முன்னரே வலுக்கட்டாயமாக நான் வெளியேற்றப்பட்டேன் என மதுமிதா பதில் புகார் அளித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் புகார் அளித்தன. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. போட்டியாளர்களிடையே சுவாரஸ்யத்தைக் கூட்ட திடீரென வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் சாக்‌ஷி, மோகன் வைத்தியநாதன், அபிராமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வைல்ட் கார்டில் உள்ளே வந்த வனிதாவுடன் ஷெரின் நெருக்கமாக இருந்த நிலையில், ''தர்ஷனிடம் நீ நெருங்கிப் பழகுவதை நிறுத்து, உனக்கு அது பாதிப்பு'' என வனிதா எச்சரித்தார். ''அது சாதாரண நட்பு. நீ ஏன் அதையே திரும்பத் திரும்பப் பேசுகிறாய்’’ என ஷெரின் பேச்சை முறித்தார். ஒரு கட்டத்தில், ''சாதாரண நட்பு அல்ல, உனக்கு தர்ஷன் மீது ஈர்ப்பு உள்ளது. லவ் உள்ளது'' என வனிதா கூற, கோபத்தில் வெடித்த ஷெரின் அழுதுகொண்டே சென்றுவிட்டார்.

அவரை சாக்‌ஷி சமாதானப்படுத்தினார். அப்போது ஷெரின், “நான் தர்ஷனுடன் நட்பாகப் பழகுவதை கொச்சைப்படுத்துகிறார் வனிதா என்று அழுதார். அப்போது சாக்‌ஷி பேசுகையில், ''வனிதா உன் மீதுள்ள அக்கறையில் சொல்கிறார், உன் ஈர்ப்பை தர்ஷன் பயன்படுத்தி அவர் வென்றுவிடுவார். நீ இங்கு நினைப்பது எல்லாம் சரி அல்ல. வெளியில் உன்னைப் பற்றி வேறு விதமாகப் பதிவாகிறது'' என்றார்.

''யாரைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. எனக்குத் தெரியும். ஆனால் இங்குள்ள வனிதா ஒரு கருத்தை உருவாக்க முயல்கிறார்'' என்று கூறியபடியே ஷெரின் அழுதார். அப்போது சாக்‌ஷி, ''நீ ஏன் அதைப்பற்றி கவலைப்படுகிறாய். தெருவில் ஆயிரம் நாய்கள் குரைக்கும். அதை எல்லாம் கண்டு பயப்பட முடியுமா?'' என்று கேட்டார்.

''வனிதா என் தோழி. அவரை எப்படி நாய் என்று சொல்ல முடியும்?'' என்றார் ஷெரின். அப்போது சாக்‌ஷி கூறிய வார்த்தைகள் நெட்டிசன்களை கோபப்படுத்தியது. ''நான் வனிதாவைச் சொல்லவில்லை. பொதுமக்களைச் (பப்ளிக்கை) சொன்னேன் என்றார். சாக்‌ஷியின் இந்த வார்த்தைகளால் சமூக வலைதளத்தில் அதிகம் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மக்களில் ஒருவன் நான். அவர்கள்தான் எஜமானர்கள் என கமல் கூற, நாய்கள் என சாக்‌ஷி சொன்னதற்கு பிக் பாஸ் நிறுவனமும், கமலும் கண்டிப்பாக எதிர்வினையாற்றுவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x