Published : 06 Sep 2019 03:34 PM
Last Updated : 06 Sep 2019 03:34 PM

அமெரிக்காவில் டெஸ்லா கார் நிறுவனத்தைப் பார்வையிட்ட முதல்வர்

மின்னணு கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத் தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 14 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதல் நாள் (29.08.19) சுகாதாரத்துறை தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டாவாது நாளில் (30.08.2019) லண்டன் நாடாளுமன்ற எம்.பி.க்களைச் முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்ட அரங்கில், தமிழ்நாட்டில் செயல்படுத்தும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த முதல்வர், நகர உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

3-வது நாளில் லண்டனில் அள்ள காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை, எளிய வழியில் மின்கட்டமைப்பில் சேர்ப்பது எப்படி என்பது குறித்து, முதல்வர் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து செப். 1-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தொழிலபதிபர்களிடம் கலந்துரையாடிய அவர், அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பஃபல்லோ நகருக்குச் சென்ற அவர், கால்நடைப் பண்ணைகளை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், யாதும் ஊரே திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இன்று மின்னணு கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத் தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில், பிரபல கார் நிறுவனமான டெஸ்லா உள்ளது. அங்கு நேரில் சென்ற முதல்வர், அங்கு தயாரிக்கப்படும் கார்களைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து டெஸ்லா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குமாறு டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

அப்போது அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x