காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிரதான அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிரதான அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.
Updated on
1 min read

சேலம்

கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதை யடுத்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள் ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 10,235 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 4 மணி அளவில் 26 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத் துக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 116.02 அடியாகவும், நீர் இருப்பு 87.26 டிஎம்சி-யாகவும் இருந்தது.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், அணை நிரம்பினால், உபரிநீர் வெளியேற வசதியாக 16 கண் மதகுகளை பொதுப்பணித்துறையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும். எனவே, அணை நாளைக்குள் நிரம்பும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 29 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 30 ஆயிரம் கனஅடியாகவும் அதி கரித்தது.

நீர்வரத்து அதிகரித்துள் ளதால், பரிசல் போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் பொது மக்கள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை 30-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in