Published : 05 Sep 2019 06:12 PM
Last Updated : 05 Sep 2019 06:12 PM
புதுச்சேரி
முதல்வரும், துணைநிலை ஆளுநரும் சேர்ந்து மக்களை ஏமாற்றுவதாக புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இலவச அரிசி வழங்குவது குறித்து அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, இலவச அரிசி வழங்க துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தடையாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இலவச அரிசி வழங்காமல் இருப்பதற்காக ஆளுநரைக் காரணம் காட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், ''சட்டப்பேரவைத் தேர்தலின்போது அனைத்து மக்களுக்கும் 30 கிலோ இலவச அரிசி வழங்குவதாக உறுதி அளித்து ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால் இந்த அரசு 39 மாதங்களாகியும் அரிசி வழங்கவில்லை.
இதுகுறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பினால், ஆளுநரைக் கேளுங்கள் என்று பதிலளிக்கிறார். இருவரும் இணைந்து நாடகமாடி, நலத்திட்டப் பணிகளைச் செய்யாமல் இருக்கின்றனர். திருட்டுத்தனமாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு'' என்றார் அன்பழகன்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிரண் பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து, மாநில அரசுக்கும் அவருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT