Published : 05 Sep 2019 05:27 PM
Last Updated : 05 Sep 2019 05:27 PM

தமிழகத்தில் லேசானதுமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் வடமாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த வானிலை ஆய்வு மைய அறிவிப்பு:

தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமத்தின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ,மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 15 செ.மீ.மழையும் நடுவட்டம் பகுதியில் 11 செ.மீ.மழையும் கோவை சின்னக்கல்லாரில் 9 செ.மீ.மழையும் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 8 செ.மீ.மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.

மத்திய வங்க கடல் மற்றும் தெற்கு அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கொண்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச 25 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x