கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்?- ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்?- ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை 

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை தயானா, சென்னை குழந்தைவேல், ரோஹினி, விழுப்புரம் விஜயகுமார், ஞானவேல் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதில் தமிழ்வழியில் பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து, ஜூன் 23-ம் தேதி நடந்த தேர்வு ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. கேள்விகள் ஆங் கிலத்தில் கேட்கப்பட்டு இருந்தன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துவிட்டு, தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்தியது ஏற்புடையதல்ல. மேலும் எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என்பதுகுறித்தும் முறையாக அறிவிக்கவில்லை. எனவே கணினி ஆசிரியர் தேர்வை ரத்து செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்ட பாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப் பி்ல், ‘‘எந்த மொழியில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என அறிவிக் கையில் குறிப்பிடாத நிலையில், தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன் பாக அனுப்பி வைக்கப்பட்ட நுழை வுச்சீட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என அறிவிக் கப்பட்டு இருந்தது. தமிழ் வழியில் தேர்வை நடத்த வாய்ப்புகள் இருந் தும், ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழில் இத்தேர்வை நடத்தாமல் புறக்கணித்துள்ளது. இதனால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என வாதிடப் பட்டது. அதையடுத்து, நீதிபதி, ‘கணினி ஆசிரியர் தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in