Published : 04 Sep 2019 04:43 PM
Last Updated : 04 Sep 2019 04:43 PM

சிலிண்டர் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு: மக்கள் மீது தொடுக்கப்பட்ட மோசமான தாக்குதல்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சென்னை

சிலிண்டர் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (செப்.4) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையினால் இந்திய நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலையிழப்பு என பல முனைகளில் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை ஒரு சிலிண்டருக்கு ரூ.16 உயர்த்தியுள்ளது. அதேபோல தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டணத்தையும் மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் பொதுவாக சமையல் எரிவாயு விலை குறைந்து வரும் சூழ்நிலையில், இங்கு விலையை உயர்த்தியிருப்பதும், இதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கும் சுங்க கட்டணத்தையும் உயர்த்தியுள்ளதும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட மோசமான தாக்குதலாகும். சுங்க கட்டணத்தை உயர்த்துவது அனைத்துப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு வழிகோலும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மீண்டும், மீண்டும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது சுமைகளை ஏற்றும் இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக இந்த கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறது", என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x