

சேலம்
பன்னாட்டுத் தொழிற்சாலைகளைத் தமிழகத்துக்குக் கொண்டு வர வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி விவசாயிகளின் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இருந்து கர்நாடகம் வரை விவசாய நிலங்களில், பெட்ரோல் பைப் லைன் பதிப்பதைக் கைவிட வலியுறுத்தி, சேலம் மாவட்டம் சங்ககிரியில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பின்னர், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ''வேளாண் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கவும் உயர் மின் கோபுரம் அமைக்கவும் அனுமதி அளித்து விவசாயிகளிடம் தமிழக அரசு எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
பன்னாட்டுத் தொழிற்சாலைகளைத் தமிழகத்துக்குக் கொண்டு வர வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி விவசாயிகளின் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும். தமிழகத்துக்குத் தொழிற்சாலை மட்டுமே போதுமா, விவசாயம் வேண்டாமா?
வெளிநாட்டில் உள்ள விவசாயிகள் எப்படி நிம்மதியாக வாழ்கிறார்கள், மற்ற தொழிலைச் செய்பவர்களை விட, விவசாயிகள் எப்படி வசதியாக வாழ்கிறார்கள் என்று பாருங்கள். அப்படிப்பட்ட நிலை, அந்த நாட்டு விவசாயிகளுக்கு எப்படி வந்தது என்று கேளுங்கள். அதைக் கேட்டுவிட்டு வந்து, விவசாயியின் மகனாகப் பிறந்த நீங்கள், விவசாயத்திலும் அக்கறை காட்டுங்கள்’’ என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.