Published : 03 Sep 2019 02:32 PM
Last Updated : 03 Sep 2019 02:32 PM

பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும்போது பயமாகவும் பதற்றமாகவும் உள்ளது: சீமான் கவலை

மதுரை

பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும்போது பயமாகவும் பதற்றமாகவும் உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட உதவும் 5 முதன்மைக் காரணிகளில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் ரியல் எஸ்டேட், வேளாண் துறை, உற்பத்தி மற்றும் தொழில் துறை ஆகியவை கடுமையான பாதிப்பை அடைந்துள்ளளன. இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கவலை தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், ''பொருளாதாரப் பாதிப்பு வந்த பின்புதான், வரியைக் குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு வந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியை எப்படி சரிசெய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பும் மிகப்பெரிய பின்னடைவைக் கொண்டு வந்துள்ளன. இது நடக்கும் என்று அவற்றைக் கொண்டு வந்த நாளில் இருந்தே கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அவர்கள் யாரும் அதைக் கவனத்தில் கொள்ளவில்லை. இப்போது அந்த வரியைக் குறைக்கிறோம், இந்த வரியைக் குறைக்கிறோம் என்கிறார்கள். பாதிப்பு ஏற்பட்டதால்தானே வரிக்குறைப்பு பற்றிப் பேசுகிறார்கள்.

பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும்போது பயமாகவும் பதற்றமாகவும்தான் உள்ளது. இதை எப்படி சரிசெய்யப் போகிறோம் என்று தெரியவில்லை'' என்று கவலை தெரிவித்துள்ளார் சீமான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x