Published : 03 Sep 2019 11:42 AM
Last Updated : 03 Sep 2019 11:42 AM

அமெரிக்காவில் பசுக்களுக்கு ஆர்வமுடன் உணவளித்த முதல்வர் பழனிசாமி

அமெரிக்காவில் முதல்வர் பழனிசாமி பசுக்களுக்கு ஆர்வமுடன் உணவளித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

14 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதல் நாள் (29.08.19) சுகாதாரத்துறை தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டாவாது நாளில் (30.08.2019) லண்டன் நாடாளுமன்ற எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் பழனிசாமி. இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்ட அரங்கில், தமிழ்நாட்டில் செயல்படுத்தும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த முதல்வர், நகர உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

3-வது நாளில் லண்டனில் அள்ள காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை, எளிய வழியில் மின்கட்டமைப்பில் சேர்ப்பது எப்படி என்பது குறித்து, முதல்வர் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து செப். 1-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தொழிலபதிபர்களிடம் கலந்துரையாடிய அவர், அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பஃபல்லோ நகருக்குச் சென்ற அவர், கால்நடைப் பண்ணைகளை ஆய்வு செய்தார்.

என்ன காரணம்?

சேலம் மாவட்டம், தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதற்கு வேண்டிய சர்வதேசத் தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பில் உள்ள நவீன முறைகள் குறித்து அறிந்துகொள்வதற்காக முதல்வர் பஃபல்லோ நகருக்குச் சென்றார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள அதிநவீன கால்நடைப் பண்ணைகளுக்குச் சென்ற அவர், கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். அத்துடன் ஆர்வமாக அங்கிருந்த பசுக்களுக்கு தீவனம் அளித்தார்.

முதல்வருடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x