Published : 03 Sep 2019 11:19 AM
Last Updated : 03 Sep 2019 11:19 AM

திரைப்பட டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை; அரசே செயலியை அறிமுகப்படுத்துகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு ஏற்ப, பண்டிகை காலங்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதைத் தடுக்க, ஆன்லைன் சேவைக் கட்டணம் இன்றி டிக்கெட் எடுக்க தமிழக அரசே செயலியை அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தமிழகத்தில் திரைப்படம் பார்க்க திரையரங்குகளுக்குச் செல்லும் மக்கள் டிக்கெட் எடுத்துப் பார்த்த காலம்போய் ரிசர்வேஷன் முறை வந்தது. அதுவும் அடுத்த கட்டத்துக்கு மாறி ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தால் கூடுதலாகப் பணம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. படம் வெளியாகும் முதல் ஓரிரண்டு வாரங்களுகு கூடுதலாக திரையரங்குகள் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் இருந்து வருகிறது.

ஆன்லைன் முறையை நெறிப்படுத்தும் எந்த ஏற்பாடும் இல்லாத நிலையில் தூத்துக்குடியில் இன்று பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு ஏற்ப, பண்டிகை காலங்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதைத் தடுக்க, ஆன்லைன் சேவைக் கட்டணம் இன்றி டிக்கெட் எடுக்க தமிழக அரசே செயலியை அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பேட்டி:

“தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகளுக்கு எத்தனை டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்துக்கொள்ள செயலி பரிட்சார்த்தபூர்வமாக உள்ளது. விரைவில் அது நடைமுறைக்கு வரும்.

ஓவ்வொரு கட்டமாக நடவடிக்கைக்கு வரும் நேரத்தில் சேவைக்கட்டணம் இன்றி ஆன்லைனில் டிக்கெட் விற்பனையும் நடைமுறைக்கு வரும். தரக்கட்டுப்பாடு குறித்து மிகத்தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கட்டண நிர்ணயிப்பும் விரைவில் நடைமுறைக்கு வரும்.

அரசின் செயலி நடைமுறைக்கு வந்தாலும், திரையரங்குகள், தனியார் ஆன்லைனில் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு அவர்கள் சேவை வரி வசூலிப்பது தொடரும்”.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் ரிலீஸாகும் படங்கள், பிரபலங்களின் படங்களுக்கு கூடுதல் காட்சிகள், அதிக விலைக்கு தியேட்டரில் டிக்கெட் விற்பனை என பல புகார்கள் உள்ளன. தேவராஜ் என்பவர் திரைப்படங்களுக்கு வசூலாகும் வரவு குறித்தும், கூடுதல் கட்டணம் குறித்தும் வழக்கு தொடுத்து அது உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் டிக்கெட் விற்பனையில் தரக்கட்டுப்பாடு அமலுக்கு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x