Published : 31 Aug 2019 06:23 PM
Last Updated : 31 Aug 2019 06:23 PM
சென்னை
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு வரவேற்கத்தக்கது என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாகக் காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதாரச் சுணக்கத்தைப் போக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சில தினங்களுக்கு முன்பு பொருளாதார ஊக்கத்திற்காக சில அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதுகுறித்து வெவ்வேறு விதமான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதுபற்றிக் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை, அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''12 வங்கிகள் மட்டுமே இருக்கும் என்பது பெரு வங்கிகளை உருவாக்கும் ஒரு பணி. உலகமயமாக்கப்பட்ட சூழலில், நமது வங்கிகள் உலகளாவிய அளவில் வலிமை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
இந்திய ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி என அனைத்து இந்தியப் பெரு வங்கிகளும் சர்வதேசத் தரத்தில் செயல்பட வேண்டும். உலகளாவிய தர மதிப்பீடு இதற்குத் தேவை. அதற்காகத்தான் வங்கிகள் இணைப்பு நடந்திருக்கிறது என நம்புகிறேன்'' என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT