

ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ‘ஜாக்டோ’ அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.தாஸ், திருவள்ளூ ரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 6-வது ஊதியக் குழுவில் மத்திய அரசு வழங்கி யுள்ள அனைத்துப் படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும். அகவிலைப்படி 100 சதவீத அளவை கடந்து விட்டதால் 50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்கிவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங் கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இப்போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பேட்டியின்போது ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக் குழு நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், பாலசந்தர், தியாகராஜன், வின்சென்ட் ஆகியோர் உடனிருந் தனர்.