Published : 31 Aug 2019 11:43 AM
Last Updated : 31 Aug 2019 11:43 AM
சென்னை
சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை தங்களது வீடுகளுக்கு அழைக்கக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சீனிவாசன், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
''பாலியல் வன்முறைகள் இல்லாத இடமாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தை உருவாக்க வேண்டும் என்று துணை வேந்தர் எண்ணுகிறார். அதன் அடிப்படையில், பெண் மாணவிகளும் பேராசிரியர்களும் பாலியல் தொடர்பான புகார்களை, துணை வேந்தரிடம் அளிக்கலாம்.
எந்த மாணவர், மாணவியையும் பேராசிரியர்கள் படிப்பு சம்பந்தமாகக் கூட வீடுகளுக்கு அழைக்கவோ, தங்க வைக்கவோ கூடாது. சிறப்பு அனுமதி பெற்றே சுற்றுலாவுக்குச் செல்ல முடியும். பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்களை, ஆராய்ச்சிக்காக வெளியூர் அழைத்துச் செல்லும் முன், அனுமதி பெற வேண்டும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மீறும்பட்சத்தில், மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து பணி இடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றறிக்கைக்கு என்ன காரணம்?
1.ஆராய்ச்சி மாணவர்கள், தங்களின் வழிகாட்டி ஆசிரியர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சில ஆண்டுகளுக்கு முன்னால், புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
2.பல்கலைக் கழக மானியக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், உள் விசாரணைக் குழு (ஐசிசி) அமைக்கப்பட்டுள்ளது. இது அளித்த ஆலோசனைகளின் அடிப்படையிலும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT