Published : 30 Aug 2019 04:12 PM
Last Updated : 30 Aug 2019 04:12 PM
சென்னை
பதினாறு செல்வங்கள் குறித்து விழாவொன்றில் வரிசைப்படுத்திப் பேசி அசத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதைக்கேட்ட அவரது மனைவி உட்பட அனைவரும் ரசித்தனர்.
ஸ்டாலின் பேப்பரில் எழுதிப் படிப்பார். வார்த்தைகளை மாற்றிப்பேசுவார் என்ற விமர்சனம் வைப்பவர்களின் வாயை அடைக்கும் விதமாக 16 செல்வங்கள் குறித்து முன்னோர் சொன்னது என்ன என்பது குறித்து கடகடவென வரிசையாக வரிசைப்படுத்தி பேசி கூட்டத்திலுள்ளவர்களை அசத்தினார் ஸ்டாலின்.
சென்னை, ராயப்பட்டையில் திமுக நிர்வாகி ஒருவரின் மணி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். தாலி எடுத்துக் கொடுத்து சிறப்பித்த ஸ்டாலின், தம்பதிகளை வாழ்த்தினார். இதில் துர்கா ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய ஸ்டாலின், ''மணி விழா என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. இந்த மணி விழாவைப் பார்க்கும்போது, 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற எனது மணி விழா நினைவுக்கு வருகிறது.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொன்னால், அது 16 குழந்தைகள் அல்ல, 16 செல்வங்கள். கி.ஆ.பெ. விசுவநாதம் தன்னுடைய நூலில் இதுகுறித்துக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். 16 செல்வங்கள் என்பது கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி என்பவைதான்.
இங்கு மணி விழா காணும் மண மக்கள், 16 செல்வங்கள் அனைத்தையும் பெற்று, இன்னும் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்றார் ஸ்டாலின்.
16 செல்வங்கள் குறித்து இடைவெளி விடாமல் ஸ்டாலின் பேசியது, திமுகவினரை மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT