Published : 29 Aug 2019 10:09 PM
Last Updated : 29 Aug 2019 10:09 PM

7 பேர் விடுதலை குறித்த நளினியின் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் தங்களுக்கு முன்விடுதலை வழங்க வேண்டுமென கோரி, நளினி தொடர்ந்த வழக்கில் நளினியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி, கடந்த பிப்ரவரியில் அரசுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டி விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது.

அதே போல, இந்திய அரசியலமைப்பு சட்டம் 361-ன் படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது எனவும்,ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாகவும், 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும், வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் ஏழு பேரை விடுவிக்க கோரிய நளினி வழக்கு தள்ளுபடி செய்து.சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x