Published : 29 Aug 2019 05:35 PM
Last Updated : 29 Aug 2019 05:35 PM

கைதான மாவோயிஸ்ட்டுக்கு 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்: உதகை நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

உதகை
குன்னூர் அருகே நெடுகல்கொம்பை பழங்குடியினரை மூளைச் சலவை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அடுத்த மாதம் 12-ம் தேதி வரை டெனிஷை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்தில் அவர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் டெனிஷ் என்கிற கிருஷ்ணன் (31). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவோயிஸ்ட் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கேரளாவில் இவரைக் கைது செய்த காவல்துறை, திருச்சூர் சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்த விசாரணையில் நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்துக்கு 2016-ல் ஊடுருவியதில் இவருக்குத் தொடர்பு உண்டு என காவல்துறை உறுதிப்படுத்தியது.

பழங்குடியினரிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, அவர்களை மூளைச் சலவை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து டெனிஷைக் கைது செய்த கொலக்கொம்பை போலீஸார் உதகை மாவட்ட நீதிமன்றத்துக்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர்.

கேரள மாநிலப் போலீஸார், கேரள தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் நீலகிரி போலீஸார் என மூன்று அடுக்கு பாதுகாப்புடன் டெனீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி பி.வடமலை டெனிஷிடம் வழக்கு குறித்துக் கேட்டபோது, ''உண்மைக்குப் புறம்பாக என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். என் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 7 வழக்குகளுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. நான் ஜாமீனில் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கில், போலீஸார் உண்மைக்குப் புறம்பாக வழக்கு தொடரந்துள்ளனர்'' என்றார்.

இதையடுத்து டெனிஷை அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பி.வடமலை உத்தரவிட்டார். இந்நிலையில், டெனிஷைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கொலக்கொம்பை காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர்.

கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

உணவு இடைவேளையின் போது டெனிஷை போலீஸார் நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர், ''இன்குலாப் ஜிந்தாபாத், மாவோயிஸம் ஜிந்தாபாத், தொழிலாளர்கள் போராட்டங்கள் வெல்லட்டும், இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட்டிசம் ஒழியட்டும், ஆசாத் காஷ்மீர் ஜிந்தாபாத்'' என கோஷங்கள் எழுப்பினார்.

நீதிமன்ற வளாகத்திலேயே டெனிஷ் கோஷங்கள் எழுப்பியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x