Published : 29 Aug 2019 12:27 PM
Last Updated : 29 Aug 2019 12:27 PM
புதுச்சேரி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 6 உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் வரியை உயர்த்தி வழங்கக் கோரி முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று (ஆக.29) சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது புதுச்சேரியில் பால் விலை உயர்த்தப்படுவது தொடர்பாக பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 6 உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதாவது சமன்படுத்திய பால் லிட்டர் ரூபாய் 36-ல் இருந்து ரூபாய் 42ஆகவும், சிறப்பு சமன்படுத்திய பால் லிட்டருக்கு ரூபாய் 38-ல் இருந்து ரூபாய் 44ஆக உயர்த்தப்பட்டதாகவும் இதேபோல் நிலைப்படுத்திய பால் ரூபாய் 42-ல் இருந்து ரூபாய் 48 ஆக உயர்த்தப்பட்டதாகவும் அறிவித்தார்.
மேலும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 4 உயர்த்தி அதாவது ரூபாய் 30-ல் இருந்து ருபாய் 34 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த பால் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT