Published : 28 Aug 2019 03:04 PM
Last Updated : 28 Aug 2019 03:04 PM
புதுச்சேரி
புதுச்சேரி பட்ஜெட்டில் விவசாயிகள், பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கரும்பு மானியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுதானியங்கள், நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. விவசாய வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
அரசுக்கு ஆகும் கூடுதல் செலவு குறித்து கவலைப்படவில்லை. விவசாயிகள் தைரியத்துடன் விவசாயம் செய்ய, இதை முன்னெடுத்திருக்கிறோம். கால்நடைகள் துறையில் பால் உற்பத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவை பசுக்கள். அதனால் ஆதி திராவிடப் பெண்களுக்கு 33% மானியமும் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 25% மானியமும் பசு மாடுகள் வாங்கும்போது வழங்கப்படும்.
பசுமாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டமும் உண்டு. புதிய தொழிற்கொள்கையை ஆரம்பித்த பிறகு, நிறைய முதலீடுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அதில் உணவு பதனிடும் தொழிற்சாலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மீனவருக்கு ஓய்வூதியம், மீன்பிடி தடைக் காலங்களில் வழங்கப்படும் மானியம் ஆகியவையும் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார் நாராயணசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT