Last Updated : 27 Aug, 2019 07:28 PM

 

Published : 27 Aug 2019 07:28 PM
Last Updated : 27 Aug 2019 07:28 PM

நாமக்கல் திமுக மருத்துவ அணி செயலாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

மருத்துவர் ஆனந்த், சித்தரிப்புப் படம்

நாமக்கல்

பரமத்தி வேலூரைச் சேர்ந்த பிரபல மருத்துவரும், திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளருமான டாக்டர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே செங்கப்பள்ளியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆனந்த் (43). அவர் பரமத்தி வேலுார் சுல்தான்பேட்டையில் காது, மூக்கு மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். அவரது மனைவி செல்வி, தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். இவர்களது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். மருத்துவர் ஆனந்த் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி செயலாளராக செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையே இன்று மதியம் 1 மணியளவில், தனது மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களை அழைத்துப்பேசி தான் வெளியூர் செல்வதாகவும், 4 நாட்கள் மருத்துவமனைக்கு விடுமுறை எனக் கூறியுள்ளார். மேலும், விடுமுறை என்பதால் இன்றே இம்மாத சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என சம்பளமும் கொடுத்துள்ளார். பின், பரமத்தி வேலுார் - மோகனூர் சாலை பாலப்பட்டி அருகே செங்கப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள தங்களது விவசாயப் பண்ணைக்குக் காரில் சென்றார்.

அங்கு சென்ற மருத்துவர் ஆனந்த் தான் கொண்டுவந்திருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது ஆனந்தன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.

ஆனந்தன் ஏற்கனவே லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்திருந்தார். நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அர. அருளரசு, ப.வேலூர் டிஎஸ்பி பழனிசாமி, ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

ஆனந்தன தற்கொலை செய்துக்கொண்டது குறித்து ப.வேலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாக்டர் ஆனந்த் ஏன் தற்கொலை செய்துகொண்டார், குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

திமுகவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x