Published : 27 Aug 2019 05:07 PM
Last Updated : 27 Aug 2019 05:07 PM

பாசனத்துக்காக மேட்டூர், வைகை, பெரியாறு அணைகள் திறப்பு: முதல்வர் உத்தரவு

சென்னை

பாசனத்துக்காக மேட்டூர், வைகை, பெரியாறு ஆகிய அணைகளைத் திறக்குமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மேட்டூர் அணை திறப்பு
''மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 28.8.2019 முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகை அணை திறப்பு
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு, நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீரினை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து 29.8.2019 முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரியாறு அணை திறப்பு
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் பெரியார் அணையிலிருந்து மொத்தம் விநாடிக்கு 300 கன அடி வீதம் 29.8.2019 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x