

ராமேசுவரம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை நாடு கடத்தவும் (இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப) படகின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் அக்டோபர் 29 அன்று நேரில் ஆஜராகவும் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12 அன்று ராமேசுவரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த கிசிங்கர் என்பவருக்குச் சொந்தமான ஒரு விசைப்படகை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைப்பற்றி அதிலிருந்து கிசிங்கர், மரிய கிதியோன், சிம்சோன், மரிய மில்லர், இன்னாசி, ஜார்ஜ், மெல்சன், ஆகிய 7 மீனவர்களை சிறைபிடித்தனர்.
7 மீனவர்களும் மீதும் இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செவ்வாய்கிழமை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. .
இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையில் 8 மீனவர்களை நாடு கடத்த (இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப) உத்திரவிட்டார்.
மேலும், அக்டோபர் 29 அன்று படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறி நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
எஸ். முஹம்மது ராஃபி