Published : 25 Aug 2019 08:07 AM
Last Updated : 25 Aug 2019 08:07 AM

கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

காற்றழுத்த தாழ்வு நிலை

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், ஒடிசா மாநில கடலோரப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக அரபிக் கடல் காற்று, ஒடிசா நோக்கி நகர வாய்ப்புள்ளது.

அதன் விளைவாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங் களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக 6 செ.மீ. மழை

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 6 செமீ, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 5 செமீ, சேலம் மாவட்டம் ஏற்காடு, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x