Published : 24 Aug 2019 09:18 PM
Last Updated : 24 Aug 2019 09:18 PM

மோகன் பாகவத்தின் பேச்சு இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு முன்னுரை: கி.வீரமணி எச்சரிக்கை

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, தனியார்த் துறைகளிலேயே இட ஒதுக்கீடு இருக்கின்றது, இட ஒதுக்கீடு தனியார்த் துறைகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், வேரையே வெட்டக்கூடிய அளவிற்கு, இட ஒதுக்கீடே தேவையில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள் என வீரமணி விமர்சித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் இன்று (24.8.2019) செய்தியாளர்களுக்குத் தி.க தலைவர் கி.வீரமணி பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

“நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்குக் கொடுக்கவேண்டும் என்றும் போராடும் இந்த நேரத்தில், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள் என்று சொல்வதைப்போல, ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வை - எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் எழுதவேண்டும் என்பதும், மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பிற்கும் தேர்வுகள் என்று சொல்கிறார்கள்.

வாழ்நாள் முழுக்க முழுக்க தேர்வுகள்தானா? இந்த நேரத்தில், நுழைவுத் தேர்வு வேறு என்று சொல்லி, கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்கக்கூடாது, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வாய்ப்புகளைக் குறைக்கவேண்டும்; பெண்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கவேண்டும்.

அதுபோலவே, கிராமப்புற பிள்ளைகளுக்கு வாய்ப்பைக் குறைக்கவேண்டும் என்ற நிலை. கல்வி ஒரு அடிப்படை உரிமை என்று சொல்லக்கூடிய நிலையை எல்லாம் மாற்றி, அந்த அடிப்படை உரிமையாகக் கொள்ளப்பட்ட அந்தத் தத்துவத்தையே, அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைப்பற்றி கவலைப்படாமல் நடந்துகொள்ளும் போக்கு இன்றைக்கு இருக்கிறது.

மறைமுக சூழ்ச்சிகள்

இதற்கிடையில், கல்வித் திட்டத்தில், மறைமுகமான சூழ்ச்சியாக இந்திய கலாச்சாரம், இந்திய மொழிகள் என்ற பெயராலே, வேதக் கணிதம், அதேபோல, சமஸ்கிருதப் பாடம், சமஸ்கிருதத்தில்தான் விஞ்ஞானமே அடங்கியிருக்கிறது; ஆகவே, விஞ்ஞானப் பாடத்தைக்கூட சமஸ்கிருதத்தில்தான் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பதுபோன்ற பல்வேறு கண்ணிவெடிகளை எல்லாம் உள்ளே வைத்து, புதிய கல்விக் கொள்கையை சரியான முறையில் ஆய்வு செய்யாமல், ஏதோ ஒரு சடங்காச்சாரம்போல் சொல்லக்கூடிய அளவில் இருக்கிறது.

எனவே, இவைகளைப்பற்றியெல்லாம் மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம்; மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்கிக் கொடுக்கவேண்டிய அவசியம் - தெளிவாக திக போன்ற ஒரு சமுதாய புரட்சி இயக்கத்திற்கு உண்டு. எனவேதான், அதனை செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

35 நாள்கள் - 38 மசோதாக்கள்

இப்பொழுது இரண்டாவது முறையாக பா.ஜ.க. மத்தியில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமைத்திருப்பது - அவர்களுக்குக் கிடைத்திருக்கின்ற பெருத்த மெஜாரிட்டி, புல்டோசர் மெஜாரிட்டி என்று சொல்லக்கூடிய ஒரு பெரும்பான்மையைப் பயன்படுத்தி, 35 நாள்களில், 38 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ‘பெருமை’ எங்களுக்கு உண்டு என்று சொல்லக்கூடிய அளவில், அதிக விவாதங்களே இல்லாமல், அதேபோல, நிலைக்குழு, பொறுப்புக்குழு, தேர்வுக் குழு ஆகிய குழுக்களைப்பற்றி கவலைப்படாமல், அந்த நிலைக்குழு, தேர்வுக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்காமல், வாய்ப்புகளைக் கொடுக்காமல் இருக்கிறார்கள்.

அதைவிட, 10 சதவிகித இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்போக்கு ஜாதியினருக்கு என்று சொல்லி, அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, திடீரென்று கடந்த 18 ஆம் தேதியன்று டில்லியில் ஒரு ஆய்வுக் கூட்டத்தினை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நடத்தியிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில், ‘RSS chief pitches for conversation on reservation in harmonious atmosphere’ என்று வார்த்தைகளில் தேனைத் தடவுவதுபோன்று, சுமூகமான ஒரு சூழ்நிலையில், இனிமேல் இட ஒதுக்கீடு தேவையா? இல்லையா? என்பதைப்பற்றி விவாதம் செய்யவேண்டும் என்கிற கருத்தைச் சொல்லியுள்ளார்.

ஆகவே, இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு முன்னுரை பாடுகிறார்கள். ஏற்கெனவே உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதே, இட ஒதுக்கீட்டின் தத்துவத்தின் வேரை வெட்டுகின்ற முயற்சியாகும்.

இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும், இதுவரையில் உள்ளே நுழைய முடியாதவர்களாக இருந்தவர்களுக்கும் கொடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு.

அரசமைப்புச் சட்டத்தின் திருத்தத்தைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்ததே கேள்விக்குறியாகி, விவாதத்திற்குரியதாகி இருக்கிறது. இன்னமும் நீதிமன்றங்களில் முழு அமர்விற்கு விசாரணைக்கு வராததாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அவர்கள் அடுத்த கட்டத்திற்கு வேகமாகப் போகிறார்கள். அந்த அடுத்த கட்டம் என்னவென்று சொன்னால், இட ஒதுக்கீடு தேவையா? இல்லையா? என்பதுதான் அது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, தனியார்த் துறைகளிலேயே இட ஒதுக்கீடு இருக்கின்றபொழுது, இங்கே உள்ள பொதுத் துறைகளை தனியார்த் துறைகளாக ஆக்கிக் கொண்டிருக்கும்பொழுது, இட ஒதுக்கீடு தனியார்த் துறைகளுக்கும் அது விரிவுபடுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், வேரையே வெட்டக்கூடிய அளவிற்கு, இட ஒதுக்கீடே தேவையில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதம்

இப்பொழுது இருக்கின்ற மெஜாரிட்டியில், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைப்பற்றி கவலைப்படாமல், அதனை செய்யக்கூடிய பேராபத்து இப்பொழுது இருக்கிறது. இதனை காங்கிரஸ் எதிர்த்திருக்கிறது; பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி எதிர்த்திருக்கிறார். மற்ற கட்சியினரும் எதிர்த்திருக்கிறார்கள்.

இதனை எதிர்த்து ‘முரசொலி’யில் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவரையும் நாங்கள் தொடர்பு கொண்டிருக்கிறோம். இதைப்பற்றி ஒரு பெரிய முடிவினை சேலம் மாநாட்டில் அறிவிக்க இருக்கின்றோம். போராடத் தயங்கமாட்டோம்.

உங்களுக்கு ஒரு தகவலைச் சொல்கிறேன், இந்த எண்ணம் அவர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டதல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைக் கொள்கையே இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான்.
வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது பி.ஜே.பி.யே.

அதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன், மண்டல் ஆணையப் பரிந்துரை செயலாக்கப்படவேண்டும் என்று சொல்லி நாங்கள் அதற்காக 16 போராட்டங்களையும், 42 மாநாடுகளையும் அகில இந்திய அளவில் நடத்தியிருக்கின்றோம்.

எல்லா மாநிலங்களுக்கும் சென்று, மாநிலத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, ஒத்த கருத்திணக்கத்தை உருவாக்கியதற்குப் பிறகுதான், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்த நேரத்தில், அவர் மண்டல் ஆணையப் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தவில்லை.

அதிலுள்ள ஒரு பகுதியைத்தான் அமல்படுத்த உத்தரவுப் போட்டார். அந்த உத்தரவினை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பெரிய ரகளை செய்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்களைத் தூண்டி கலவரத்தையும் ஏற்படுத்தினர். மண்டலுக்கு எதிராக கமண்டல் என்று யாத்திரை நடத்தி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆட்சியை கவிழ்த்தார்கள்.

ஆகவே, அன்றையிலிருந்து பார்த்தீர்களேயானால், அவர்களுடைய அடிப்படை கொள்கை என்பது இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான். இப்பொழுது தங்கள் கைகளில் ஆட்சி வந்துவிட்டது என்பதைப் பயன்படுத்திக் கொண்டு, இப்பொழுது அதனை வேகமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

இன்னொரு ஆதாரம், 2015 ஆம் ஆண்டு, Revised Reservation System, R.S.S. Mohan Bhagavath, 20.9.2015 ஆகவே, தொடர்ந்து இட ஒதுக்கீட்டினை அவர்கள் எதிர்த்துத்தான் வருகிறார்கள். முன்பு சொல்வதற்கும், இப்பொழுது சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. காரணம், மத்திய ஆட்சி அவர்களுடைய கைகளில் இருக்கிறது.

அவர்கள் எதை நினைக்கிறார்களோ, எதிர்க்கட்சியோ, மற்றவையோ, அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப்பற்றி கவலைப்படாமல், அதனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான், இதைப்பற்றி ஒரு பெரிய முடிவெடுக்கவேண்டும்.

தென்னாடுதான் இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையானது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடும், கர்நாடகமும்தான் முன்னோட்டமாக இருந்த மாநிலங்கள். அந்த வகையில், தமிழ்நாடுதான் இட ஒதுக்கீட்டிற்கு வழிகாட்டக் கூடியது.

முதலாவது சட்ட திருத்தம் வந்தது எப்படி?

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் பெரியாருடைய பெருமுயற்சியால், இங்கே இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் முயற்சி செய்து, தி.க, திமுக, காங்கிரஸ், காமராஜருடைய ஒத்துழைப்பு எல்லோரும் பாடுபட்டதினால்தான், நேரு, முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். கம்யூனல் ஜி.ஓ. இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையை உண்டாக்கினார்கள்.

அம்பேத்கர், Socially and Educationally என்ற வார்த்தைகளைப் போட்டு திருத்தினார். இவ்வளவும் நடந்திருக்கிறது. இப்பொழுது எல்லாவற்றிற்கும் அடிப்படைக்கே ஆபத்து வரக்கூடிய அளவிற்கு இருக்கிறது. 69 சதவிகித இட ஒதுக்கீடு, ஜெயலலிதா அவர்களுடைய காலத்தில் 9 ஆவது அட்டவணையில் பாதுகாக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பொருளாதார அளவுகோல்

அதேபோன்று, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபொழுது, வருமான உச்சவரம்பை அவர் கொண்டு வந்தபொழுது, அதனை நாங்கள் எதிர்த்து, தெளிவாக விளக்கிக் காட்டியவுடன், திக, திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து போராடியதின் விளைவாகத்தான், தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை எம்.ஜி.ஆர். அவர்கள் சந்தித்தார்.

பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எங்களைப் போன்றவர்களின் கருத்துகளைக் கேட்டு, வருமான உச்ச வரம்பை நீக்கினார். இந்த வரலாறுகள் எல்லாம் தமிழ்நாட்டிற்குத்தான் உண்டு. ஆகவே, தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டக்கூடாது

தமிழக அரசுக்கு, உங்கள் மூலமாக எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால், இதில் அலட்சியம் காட்டக்கூடாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அம்மா ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி என்று சொல்கிறார்கள்; அவர்களுடைய ஆட்சியில்தான் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குப் பாதுகாப்பு, 31 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை, 50 சதவிகிதமாக ஆக்கினார் எம்.ஜி.ஆர்.

எனவேதான், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், சமூகநீதி என்பது வளர்ந்து வந்திருக்கின்ற ஒன்று. பாதுகாப்போடு இருக்கின்ற ஒன்று என்பதுதான் தமிழ்நாட்டில் இருக்கின்ற சூழல்.

திராவிட மண், பெரியார் மண் என்று ஏன் சொல்கிறார்கள் என்று கேட்கிறார்கள், இதுதான் பெரியார் மண், தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கக்கூடியது. எனவே, அந்தக் காலத்தில் அறிஞர் அண்ணா, திராவிட நாட்டில் ‘‘சேலம் செயலாற்றும் காலம்‘’ என்று தலையங்கம் எழுதினார்.

முதல் கட்டம் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கும். பிறகு, அகில இந்திய அளவில் விரிவடையும். ஏனென்றால், அகில இந்திய தலைவர்களும் இந்தப் பிரச்சினையைப்பற்றி உணர்ந்திருக்கிறார்கள். ஏற்பட்டிருக்கின்ற ஆபத்தை அவர்களும் புரிந்திருக்கிறார்கள்.

ஆகவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தப் பணியை செய்வதற்கு இருக்கிறோம் என்பதை உங்கள்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன? அந்தக் கூட்டத்திற்கு எங்களையெல்லாம் அழைத்தார்கள்; கருத்துகளைக் கேட்டார்கள். இப்பொழுது அந்தக் கூட்டத்தின் முடிவு என்னவென்று யாருக்கும் தெரியாது. கிணற்றில் போட்ட கல் போன்று இருக்கிறது. கூடுதலான இடங்களுக்காக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நாம் ஒப்புக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதற்காகத்தான் அந்தக் கூட்டத்தையே ஏற்பாடு செய்தார்கள்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு பிரச்சினை ஒன்றும் இல்லை. ஏனென்றால், சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும்தான். 69 சதவிகிதத்தைத் தவிர, மீதி எஞ்சியிருக்கின்ற 31 சதவிகிதத்திற்கு எல்லோரும் போட்டி போடலாம், திறமையின் அடிப்படையில்.

10 சதவிகிதம் கொடுத்துவிட்டால், 31 சதவிகிதத்திலிருந்து குறைந்துவிடும் அல்லவா! பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, திறமையானவர்களுக்கு, அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அந்த வாய்ப்புகளை மறுத்துவிடுகிறார்களே என்பதையெல்லாம் அந்தக் கூட்டத்தில் விளக்கிச் சொன்னோம்.

அந்தக் கூட்டத்தில் நாங்கள் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று சட்டமன்றத்திலேயே துணை முதல்வர் ஓ.பி.எஸ். குறிப்பிட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்கிறோம்.

இட ஒதுக்கீட்டின் வேரை வெட்டுவதுதான் 10 சதவிகித இட ஒதுக்கீடு

அதேநேரத்தில், 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே மாற்றுவதுதான் என்பதை விளக்கி சொன்னவுடன், அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். ஆனால், என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியாது.

மோகன் பாகவத் கருத்தை பெரிதுபடுத்தவேண்டாம் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சொல்லியிருக்கிறார், அவர் என்னுடைய நண்பர்தான். நான் எழுதிய அறிக்கையிலும் சொல்லியிருக்கிறேன். மண்டல் ஆணைய அறிக்கை வருவதற்கு முன்பு, காங்கிரஸ் அப்பொழுது மத்திய ஆட்சியில் இருந்தது.

சிக்மகளூரில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதேபோன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்காகத்தான் இட ஒதுக்கீடு.

இதுவரையில் எஸ்.சி., எஸ்.டி.,க்கு சட்டப்படி இட ஒதுக்கீடு இருக்கிறது. சட்டப்படி இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்காகத்தான் மண்டல் ஆணைய அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். முதல் கமிசன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதேபோன்று இப்பொழுது ஆகிவிடக்கூடாது.

உங்களுடைய காலத்தில் அது வரவேண்டும் என்று சொல்லி, எல்லோரிடமும் கையெழுத்து வாங்கினோம். 223 பேர் கையொப்பமிட்டனர்; அந்த நகல் என்னிடம் இருக்கிறது.டில்லியில் டி.பி.யாதவ் என்பவர், கல்வியமைச்சராக இருந்தார். அவர்தான் காங்கிரசு கட்சியின் பேக்வர்டு கிளாஸ் செல் என்பதற்கு செயலாளராக இருந்தார்.

அவர்மூலம் நாங்கள் முயற்சி எடுத்தவுடன், அவர் அனைத்து எம்.பி.,க்களிடமும் கையெழுத்து வாங்கினார். எல்லாக் கட்சிகளிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த 223 எம்.பி.,க்கள் கையொப்பமிட்டார்கள். அதனை இந்திரா காந்தியிடம் கொடுத்தார்கள். அப்பொழுது ராம்விலாஸ் பஸ்வான் எதிர்க்கட்சியில் இருக்கிறார். அவர் மூலமாக விவாதம் நடைபெற்றது.

கேரள மாநிலத்தில் உள்ளவர்கள் உள்பட அந்த விவாதத்தில் பேசினார்கள். அந்த விவாதத்தின்போது, மாலை நேரத்தில் சிற்றுண்டி கொடுத்தார்கள்; இரவு நேரம் உணவு கொடுத்தார்கள். இரவு 12 மணிக்குமேலேயும் அந்த விவாதம் நடைபெற்றது. பஸ்வான்தான் மிகக் கடுமையாக பேசினார்.

‘‘இட ஒதுக்கீட்டில் விவாதத்திற்கே இடமில்லை!’’ எல்லோரும் சேர்ந்து என்ன முடிவெடுத்தார்கள் என்றால், ‘‘இட ஒதுக்கீட்டில் நாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டவர்கள் அல்ல. Reservation is a non Negotiable subject அது மறு விவாதத்திற்கோ, மறுபரிசீலனைக்கோ உரியது அல்ல என்று இந்த நாடாளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியது’’ என்று தீர்மானம் போடப்பட்டது.

இப்பொழுது அதைப் பெரிதுபடுத்தவேண்டாம் என்கிறார். அவருக்கு என்ன ஒரு பிரச்சினை என்றால், இப்பொழுது பா.ஜ.க. கூட்டணியில் அவர் இருக்கிறார். இதை பஸ்வான் அவர்கள் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. ஆனாலும், பஸ்வானை வைத்துக்கொண்டு, இதை மத்திய ஆட்சி செய்தது என்றால், இட ஒதுக்கீட்டிற்கு அவரே சாட்சி.

ஜம்மு காஷ்மீரில் இட ஒதுக்கீடு பலன் கிடைக்கும் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று சொல்கிறார்கள். முதலில் மற்ற பிரச்சினைகள் முடியட்டும். அவர்கள் தந்திரமாகத்தான் பேசுகிறார்கள்.

இப்பொழுதுகூட இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுங்கள் என்று சொல்லவில்லை. மிக சுமூகமான சூழ்நிலையில், இரண்டு பேரும் விவாதம் நடத்தி செய்யவேண்டும் என்று சொல்வது தந்திரமே தவிர வேறொன்றுமில்லை.

இரண்டாவதாக, ஆர்.எஸ்.எஸ். சொல்வதைக் கேட்பதா? அல்லது அமித்ஷா சொல்வதைக் கேட்பதா? என்றால், அமித்ஷா உள்பட, மோடி உள்பட எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். உத்தரவு போடுகின்ற இடத்தில் இருக்கிறது; இவர்கள் அதனை செய்கின்ற இடத்தில் இருக்கிறார்கள். அதனால், இவர்களுடைய பதிலுக்கு முக்கியத்துவம் கிடையாது”.`

இவ்வாறு திக தலைவர் தமிழர் தலைவர் வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x