Published : 24 Aug 2019 05:30 PM
Last Updated : 24 Aug 2019 05:30 PM

நூலகத்துறைக்கு மதுரை மாநகராட்சி ரூ.32 கோடி வரி பாக்கி: நிதி பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்

மதுரை,

நூலகத்துறைக்கு மதுரை மாநகராட்சி மட்டும் ரூ.32 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் நிதி பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது கூட நூலக துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலகங்கள் வளர்ச்சியாக நூலக வரியும் சேர்த்து செலுத்துகின்றனர். சொத்து வரி ரசீதில் நூலக வரிக்காக வசூலித்த 10 சதவீதம் தொகையைக் குறிப்பிட்டுதான் வசூல் செய்கின்றனர்.

பொதுமக்களிடம் வசூல் செய்த இந்த நூலக வரியை, உள்ளாட்சி அமைப்பினர் நூலகங்கள் மேம்பாட்டிற்கு மாவட்ட நூலகத்துறைக்கு வழங்கி விட வேண்டும்.

ஆனால், பொதுமக்களிடம் சொத்துவரியுடன் 100 சதவீதம் நூலக வரியை வசூல் செய்யும் உள்ளாட்சி அமைப்பினர், அந்த தொகையை நூலகத்துறைக்கு கொடுப்பதில்லை.

இந்த தொகையை கேட்டு நூலகத்துறை அதிகாரிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு(பிடிஓ அலுலவகம்) நடையாக நடக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் மனதார இந்த தொகையை நூலகத்துறைக்கு கொடுக்க முன்வர மாட்டார்கள். இதுதொடர்பாக நூலகத்துறை கடிதம் அனுப்பினாலும் உள்ளாட்சி அமைப்பினர் பதில் கூட அனுப்பமாட்டார்கள்.

நூலகத்துறையின் வரியை வசூல் செய்துவிட்டு அவர்களுக்கு ஏதோ நன்கொடை வழங்குவதுபோல் அந்த தொகை ஒவ்வொரு கட்டமாக வழங்குவார்கள். அதுவும், பெரும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வழங்கி நூலகத்துறையை ஏமாற்றுவதாக அந்த துறை அதிகாரிகள் ஆதங்கம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்ட நூலகத்துறைக்கு மாநகராட்சி நிர்வாகம், கடந்த மே மாதம் வரை ரூ.31 கோடியே 89 லட்சத்து 27 ஆயிரத்து 640 ரூபாய் நூலக வரியை வழங்காமல் பாக்கி வைத்துள்ளது.

அதுபோல், மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் ரூ.2 கோடியே 12 லட்சத்து 64 பாக்கியும் பேரூராட்சிகள் ரூ. 4 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 838 பாக்கியும், கிராம பஞ்சாயத்துகள் ரூ.3 கோடிய 85 லட்சத்து 420 பாக்கியும் நூலகத்துறைக்கு செலுத்தாமல் வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நூலகத்துறை அதிகாரி ஒருவரிடம் கூறுகையில், "பொதுமக்கள் செலுத்தும் நூலக வரியை அரசே நேரடியாக உள்ளாட்சித்துறை அமைப்புகளிடம் இருந்து பெற்றுக் கொடுக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். நாங்கள், எங்கள் வரிப்பணத்தை அவர்களிடம் கெஞ்சி கேட்டு பெற வேண்டிய உள்ளது. அவர்கள் ஒருவர் பாதாளசாக்கடை வரி, குடிநீர் இணைப்பு வரி கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், பொதுமக்கள் சொத்துவரியுடன் 100 சதவீதம் நூலகவரியையும் செலுத்தியும் அந்த நிதி எங்களை வந்து சேராததால் அரசு எந்த நோக்கத்திற்காக இந்த நிதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்ததோ அது நிறைவேறாமல் நூலகங்கள் நிதி பற்றாக்குறையால் தள்ளாடுகின்றன.

நூலகங்களில் 30 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே நிரந்தரப்பணியாளர்கள். அரசு நேரடியாக ஊதியம் கொடுக்கிறது. மீதி 70 ஊழியர்களுக்கு நூலக வரியில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் பெரும்பாலான நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் உள்ளது. வாடகை கட்டிடத்தில் இட நெருக்கடியில் செயல்படுகின்றன. நூலக வரி கிடைத்தால் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டலாம். வாசகர்கள் வாசிப்பதற்கு கூடுதல் புத்தகங்கள், நாளிதழ்கள் வாங்கி அவர்கள் அறிவை வளப்படுத்தலாம்.

தற்போது உள்ளாட்சி அமைப்புகள் கோடிக்கணக்கில் நிலுவை தொகை இருந்தும் அதில் அவர்கள் சொற்ப தொகையை மட்டுமே வழங்குகின்றனர். அந்த நிதி, ஊழியர்களுக்கு ஊதியம் போடுவதற்கும், அன்றாட செலவினங்களுக்க்கும் மட்டுமே செலவிடப்படுகிறது. தொலை நோக்குப்பார்வையில் நூகலகங்களை மேம்படுத்த முடியவில்லை.

அதேநேரத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கும் நூலக வரியை நூலகத்துறைக்கு வழங்காமல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்துகின்றன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x