Published : 24 Aug 2019 04:21 PM
Last Updated : 24 Aug 2019 04:21 PM

இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர நிலை பிரகடனம் நீக்கம்

ராமேசுவரம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை நான்கு மாதங்களுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்.21 அன்று ஈஸ்டர் பண்டிகையின்போது 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இந்தியர்கள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அந்த பயங்கர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். மேலும் இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தலைவராக ஜஹ்ரான் ஹாசிமின் செயல்பட்டதாகவும், இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என்றும் இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது. இதையடுத்து அந்த அமைப்புக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 24 முதல் அவசர கால சட்டமும் அமல்படுத்தப்பட்டது. இந்த அவசர கால சட்டத்தின் மூலம் இலங்கை காவல்துறைக்கு மட்டுமே இருந்த பல அதிகாரங்கள் ராணுவத்தினரின் வசமானது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வந்தன.

மேலும், அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு விசாரணை நிறைவு பெறும் வரை நீதிமன்றத்தினால் கூட பிணை வழங்க முடியாத நிலையும் இருந்தது.

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை ஆகஸ்ட் 23 அன்று நீக்கப்படுவதாக அந்நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் சுமித் அத்தபத்து வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இருப்பினும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா சனிக்கிழமை அந்நாட்டு முப்படையினருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்காக சிறப்பு அதிகாரம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் விலக்கப்பட்டுள்ள நிலையிலேயே முப்படையினருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ். முஹம்மது ராஃஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x