Published : 24 Aug 2019 03:29 PM
Last Updated : 24 Aug 2019 03:29 PM

நாட்டுக்குக் கிடைத்த மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவர் அருண்ஜெட்லி: ஸ்டாலின் இரங்கல்

சென்னை

நாட்டுக்குக் கிடைத்த மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவர் அருண்ஜெட்லி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக, எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (ஆக.24) காலமானார். அவருக்கு வயது 66. அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அருண்ஜெட்லி: கோப்புப்படம்

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், "முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினருமான அருண்ஜெட்லி திடீரென மறைவெய்திவிட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு திமுகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் 'ஜெ.பி' என்று இன்றளவும் அழைக்கப்படும் 'மக்கள் தலைவர்' ஜெயபிரகாஷ் நாராயணனின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி, நெருக்கடி நிலைமை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜெட்லி ஒரு ஜனநாயகவாதி மட்டுமல், நாட்டுக்குக் கிடைத்த மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவர்.

செய்தி, வர்த்தகம், ராணுவம், சட்டம், நிதி உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் மத்திய அமைச்சராக மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையிலும் பணியாற்றி பராட்டுக்களைப் பெற்றவர்.

அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நட்புடன் பழகிய அருண்ஜெட்லி, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், ஆளுங்கட்சியாக இருந்த நேரங்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதிலும் பெரும்பங்காற்றியவர். நாடாளுமன்ற விவாதங்களில் தனித்திறமையுடனும், அறிவுக்கூர்மையுடனும் பதிலளிக்கும் ஆற்றல் பெற்றவர்.

மறைந்த தலைவர் கருணாநிதி மீது பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருந்த அருண்ஜெட்லி, மூத்த வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர் என்பது மட்டுமின்றி, நீதிபதிகளின் நன்மதிப்பைப் பெற்றவர். நீதித்துறை சீர்திருத்தங்களுக்காக பாடுபட்டவர்.

பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், நாடாளுமன்றவாதியுமான அவர், 66 வயதிலேயே மறைவெய்தியது பாஜகவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், சக வழக்கறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்", என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x