Published : 24 Aug 2019 12:29 PM
Last Updated : 24 Aug 2019 12:29 PM

ரயில்வே சொத்துகளை தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க முயற்சி: வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "2014 இல் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல், ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப்ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

ஆனாலும், ரயில்வே துறை தனியார்மயம் ஆகாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், முன்னாள் அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் கூறி வந்தனர். கடந்த மே மாதம் இரண்டாவது முறையாகப் பொறுப்பு ஏற்ற பின்பு, 100 நாள் செயல் திட்டம் என்ற பெயரில், ரயில்வே உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க பாஜக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

நெரிசல் இல்லா வழித்தடங்களிலும், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள வழித்தடங்களிலும், தங்க நாற்கரப் பாதை எனப்படும் சென்னை - மும்பை, மும்பை - டெல்லி, டெல்லி - ஹௌரா, ஹௌரா - சென்னை வழித்தடங்களிலும், தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்குவதற்கு உரிமம் அளிக்கின்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரீமியம் கட்டண ரயில்களைத் தனியார் இயக்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கெனவே ரயில்வேத் துறைக்குச் சொந்தமான அச்சகங்கள் மூடப்பட்டுள்ளன. பயணச் சீட்டு வழங்குவதையும், ரயில் பெட்டி தயாரிப்பு, ரயில் இயந்திரம் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் ஏழு உற்பத்தி ஆலைகளையும், ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க ரயில்வே துறை முனைந்துள்ளது.

இந்நிலையில், ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகக் காரணம் கூறி, ஐஆர்சிடிசியின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய நேற்று முன்தினம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது. ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட இரண்டு கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் ரூபாய் 600 கோடி வரை திரட்டுவதற்கு ரயில்வே துறை முடிவு எடுத்து இருக்கின்றது.

ரயில்வே துறையைப் புதுப்பிக்க, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகின்றது; ஆனால் ஆண்டுக்கு 1.6 லட்சம் கோடி மூலதனம் இடும் சக்தி மட்டுமே ரயில்வே துறையிடம் இருப்பதால், தனியார் மூலதனம் தேவை என்று பாஜக அரசு தனியார் மயத்தை நியாயப்படுத்துகின்றது. நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறையைப் புதுப்பிக்கத் தேவையான நிதி, பொதுத்துறை-தனியார் கூட்டின் மூலம் திரட்டப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும்; ஏழை எளிய மக்களுக்கு ரயில் பயணம் என்பது எட்டா கனியாக ஆகிவிடும். சரக்குக் கட்டணங்கள் கடுமையாக உயரும்; அதனால், விலைவாசி உயரும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.

எனவே, முன்பு அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் வகையில், ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்", என, வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x