Published : 23 Aug 2019 05:46 PM
Last Updated : 23 Aug 2019 05:46 PM

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: ராமேசுவரத்தில் சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ராமேசுவரம்,

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து ராமேசுவரத்தில் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் தமிழகத்திற்கு வந்து சென்றதாகத் தகவல்கள் பரவின.

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தமிழகத்தில் ‘அன்சருல்லா’ தீவிரவாத அமைப்பைத் தொடங்க முயற்சி செய்ததாகவும் எழுந்த புகாரில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் சவுதியில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை, ராமநாதபுரம் என பல்வேறு இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர் குலைக்கவும், தாக்குதல் சம்பவங்கள் நடத்தவும் தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகவும், அவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவினர் மாநில காவல்துறையை எச்சரித்துள்ளனர்.

அந்த தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

தமிழக காவல்துறை மூலம் அனைத்து மாவட்ட காவல் துறையும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளில் ஒருவர் பாகி்ஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்ற 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் அருகே இந்திய-இலங்கை சர்வதேச கடல் வழி பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக தீவிரப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மண்டபம் கடலோர காவற்படையினர் ராமேசுவரம், தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் ஹோவர்கிராப்ட் கப்பல்கள் மூலம் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x