Published : 23 Aug 2019 05:04 PM
Last Updated : 23 Aug 2019 05:04 PM
கோவை
கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவலை அடுத்து கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள், கோவைக்கு வந்து சென்றதாகத் தகவல்கள் பரவின. தொடர்ந்து, தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் தொடர்பு வைத்து இருந்ததாகவும் இரண்டு பேர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து கோவையில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடத்தத் திட்டமிட்டதாக மூன்று பேர் மாநகரக் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவினர் மாநில காவல்துறையை எச்சரித்துள்ளனர்.
அந்த தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தீவிரமாகப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையத்துக்கு வெளியில் நிற்கும் வாகனங்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே, உள்ளே அனுப்பப்படுகிறது.
அதேபோல பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் தீவிரப் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ''திரையரங்குகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. எச்சரிக்கை தகவல் கிடைத்ததன் பேரால் இந்தசோதனை நடத்தப்படுகிறது.
இதுவரை யாரும் பிடிபடவில்லை. தவிர மாநகர போலீஸார் 1,500 பேரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT