Published : 22 Aug 2019 12:09 PM
Last Updated : 22 Aug 2019 12:09 PM

ஏன் ஓடி ஒளிந்தீர்கள்?- சிதம்பரத்திடம் தமிழிசை கேள்வி

சென்னை

சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கும் அமித் ஷா கைதுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழிசை, விசாரணையின்போது ஏன் ஓடி ஒளிந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

என்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. அண்மையில் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வந்தது. இந்தநிலையில் சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டுக் கதவு மூடியிருந்ததால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன். சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காலையில் சம்மன் வழங்கப்பட்ட உடன் ப.சிதம்பரம், அதை நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நேற்று இரவு நிகழ்ந்த நாடகம் நடந்திருக்காது.

பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால் விசாரிக்க அழைக்கும்போது, நீங்கள் நேரடியாக விசாரணைக்கு வந்திருக்கலாமே. ஏன் ஓடி ஒளிந்தீர்கள்? சுமார் 10 மணி நேரம் எந்தத் தகவலும் இல்லை. வந்ததற்குப் பின், ஏன் உங்களைப் பூட்டிக் கொண்டீர்கள்? இதெல்லாம் நேர்மையாக விசாரணையை எதிர்கொள்பவர்கள் செய்வதா?

மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் உங்களுக்குப் பயம்? அமித் ஷா கைது செய்யப்பட்டதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. காங்கிரஸ்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள். காங்கிரஸ் தலைவர் அழகிரி ஜனநாயகப் படுகொலை என்கிறார்.

சிதம்பரம் நடந்துகொண்ட விதம்தான் ஜனநாயகத்துக்குப் புறம்பானது. ஜனநாயக ரீதியாக சிபிஐ அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் அவர்கள் நடந்துகொண்டார்கள். ஜனநாயகப் படுகொலை என்று சொல்வதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இன்றும் ராகுல், பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் ஊழலுக்குத் துணை போகின்றனர் என்பதுதான் உண்மை'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x